Tuesday, July 17, 2007

அபோகலிப்டோ

உலகிலேயே மனித இனம் ஒன்றுதாள் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் பண்புடையது.. இன்று பொருளுக்கும் பணத்துக்கும் மதத்துக்கும் நாட்டுக்கும் அடித்துக் கொண்டு மரித்துப் போகும் மனித இனம் தன் ஆரம்ப நாள்களிலும் குழுவாகப் பிரிந்து சண்டையிட்டது. காடுகளும் இயற்கையும் அழியாமல் இருந்த காலத்தில் காடுகளுக்குள் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் குழுவாகப் பிரிந்திருந்தனர். இத்தகைய குழுக்களின் தொகுப்புக்கென தனித்ததொரு நாகரிகமும் இருந்தது. அத்தகைய தொன்மையான நாகரீகங்களில் ஒன்று மாயன் நாகரிகம்.

இயற்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டு விடாமல் கற்கருவிகளை அதிகம் பயன்படுத்திய காலத்தில் நடக்கிறது கதை. காட்டுப் பன்றியை வேட்டையாடும் தீவிரத்தோடு தொடங்கும் படம் இரத்தமும் சதையுமாக (உண்மையாகவே) நகர்கிறது. உணவுக்கான வேட்டை-யாடுதலில் பன்றியைப் பங்கிடும் கதாநாயகன் கருஞ்சிறுத்தை பாதம் (Jaguar paw) அதன் இருதயத்தையும் பிற உறுப்புகளையும் அறுத்தெடுத்து பிரித்துக் கொடுக்கும்போது தோன்றும் முதல் அருவருப்பு போகப் போக விறுவிறுப்-பாகி விடுகிறது. உணவும் இனப்-பெருக்கமும் மட்டுமே முக்கியத் தேவை-களாயிருந்த காலத்தில் வாழ்ந்த அந்தக் கூட்டத்தின்மீது மற்றொரு கூட்டம் நடத்தும் திடீர்த் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் உடல் வலுவானவர்கள் மட்டும் பிடிக்கப்பட்டும் விற்பனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கடவுளுக்கு பலியிடுவதற்காக வாங்கப்படும் அவர்கள் ஒவ்வொருவராக நரபலியிடப்படுகின்றனர்.

இவர்களை அழைத்துச் செல்லும்போதே உயரிய மேடையின் படியில் ஏதோ உருட்டி விடப்படுவது காட்டப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் மேலே அழைத்துச் சொல்லப்பட்டபின்தான் உருட்டி விடப்பட்டவை பந்துகளோ கற்களோ அல்ல தலைகள் என்ற உண்மை நம்மை உறைய வைக்கும். பலியிடப்படுபவர் உடலிலிருந்து ஒரே குத்தில் இருதயம் உருவப்படும்போது முதலில் பன்றிக்கு நிகழ்ந்தது நம் நினைவுக்கு வந்து விடுகிறது.

கதாநாயகன் வெட்டப்பட இருக்கும்போது தோன்றும் சூரியக் கிரகணத்தால் கடவுளின் அணை என்று கூறி அவனையும் அவன் தொடர்ந்தோரையும் விட்டு விடுகிறார்கள். விற்பனைக்கு அழைத்து வந்தவர்களை வீணாக அனுப்ப முடியுமா குறி பார்த்து எறிந்து பழகி விளையாடுகிறார்கள் அழைத்து வந்தவர்கள். மற்றவர்கள் மாண்டு விட தப்பிச் செல்லும் நாயகன் இவர்களின் தொடர் வேட்டையையும் தாண்டி தான் மறைத்து வைத்துவிட்டு வந்த மனைவியையும் குழந்தையையும் தேடிச் செல்கிறார்.மாயன் நாகரிக மக்களின் மொழி புரியத் தேவையில்லை; என்னும் அளவுக்கு இயற்-கையின் பிரம்மாண்டத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் காட்சியில் உணர்த்துகிறார் இயக்குநர் மெல்கிப்சன். வரலாற்றுக் கதைகளை தொடர்ந்து எடுத்து வரும் மெல் கிப்சனின் இந்தப் படம் 2006 இறுதியில் அமெரிக்காவில் வெளியானாலும் இந்தியாவில் இந்த மாதம்தான் வெளியிடப்படுகிறது.

உரிய ஆய்வுக்குப் பிறகே எடுக்கப்பட்டிருப்-பதாக சொல்லப்பட்டாலும் விமர்சனங்களும் எதிர்வினைகளும் தொடர்ந்து வருகின்றன. கணிதத்திலும் வானியலிலும் சிறந்திருந்த மாயன் நாகரித்து மக்களை காட்டுமிராண்டிகளாகவும் ரத்த வெறி பிடித்தவர்களாகவும் காட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் பொங்குகிறார்கள். அமாவாசை அன்றுதான் சூரிய கிரகணம் வரும் என்பதுகூட தெரியாமல் சூரியகிரகணம் தோன்றிய அன்றே முழு நிலவு தோன்றுவதாக காட்டப்படும் அளவுக்கு தெளிவற்ற படம் என்றும் கொலம்பஸ் வருகைக்கு முந்திய மக்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும் எதிர்க்குரல் எழுந்திருக்கிறது.

கதை நிகழும் காலத்தில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையெனப்படுகிறது. ஏனெனில் முந்தைய மாயன் நாகரிகத்தில்தான் பிடுமிடு போன்ற அமைப்புடைய கட்டடம் இருந்தது. நாடு தேடிப் புறப்பட்ட கப்பல்கள் வந்து சேர்ந்தது பிந்தைய மாயன் காலத்தில் இரண்டும் காட்டப்படுவதால் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது.

பள்ளத்துக்குள் மனைவியும் குழந்தையும் ஒளிந்திருக்க மழை கொட்டி பள்ளம் நிரம்பத் தொடங்குகிறது. நிறைமாதக் கர்ப்பிணியான அவள்தன் மகனைக் காக்க அவனைத் தோளில் தூக்கியபடி இருப்பவருக்கு பிரசவ வலி வருகிறது. முக்கி முனகும் பெண் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடியே குழந்தையைப் பெற்றெடுக்கும் காட்சி ஒரு நிமிடம் நம்மை ஆட்டி விடுகிறது.

கதையின் நிறைவுக் காட்சிகளில் கதாநாயகனை எதிரணியினர் இருவர் துரத்தி வருகின்றனர். மூவரும் எதிரில் ஏதோ புதிதாய் ஒன்று இருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். எதிரில் கப்பல் ஒன்று வந்து நிற்கிறது. கப்பலை அது வரை பார்த்தறியாத எதிரணியினரும் மிரண்டு நிற்க நாயகன் மீண்டும் தப்பி மனைவி குழந்தைகளை அடைகிறான். பின்னர் அது என்னவென்று கேட்கும் மனைவியிடம் "என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதில் மனிதர்கள் வந்திறங்கினார்கள் என்கிறார் நாயகன். நாம் அதை நோக்கிப் போகலாமா எனக் கேட்கும் மனைவியிடம் `வேண்டாம். நம் காட்டை நோக்கி சென்று புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம் என்று மீண்டும் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறான்.

அந்தக் கப்பல் அவர்களை மட்டுமல்ல தங்கள் ஒட்டு மொத்த தங்கள் இனத்தையே அழிக்கப் போகிறது என்பதை அறியாமலேயே!

- சமா.இளவரசன்,

No comments: