Tuesday, December 14, 2010

அடக்கப்பட்ட மக்களின் அரிமா


இந்தியாவின் தனித்தன்மை என்று பார்ப்பனர்களால் பெருமையாகவும், சமூக விஞ்ஞானிகளால் பெருங்கொடுமையாகவும், அநீதியாகவும் சுட்டிக் காட்டப்படுவது தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஜாதிமுறை. புத்தர் தொடங்கி இன்றைய காலம் வரை வர்ணாஸ்ரமத்திற்கும், ஜாதிக்கும் எதிரான போராட்டம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் பக்கங்களில் இவரின் பங்களிப்பு ஒரு புரட்சியின் வீச்சு. ஆரிய சனாதனத்தையும், அது அமர்ந்திருந்த அதிகாரப் பீடத்தையும் ஆட்டம் காணச் செய்த பேரிடி!  அடிமை வாழ்வைத் தகர்க்க, அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டியதன் அவசியத்தை இந்திய மண் எங்கும் பரப்பிய பெரு நெருப்பு!


மாபெரும் திறமைசாலிகள் என பூணூல் படர்ந்த தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பார்ப்பனக் கூட்டத்திற்கிடையில், தன் தனிப்பெரும் ஆற்றலால் இந்திய அரசியல் சாசனத்தை வடித்த சிற்பி! ஓரளவுக்கேனும் மனித உரிமைக்கும், கருத்துரிமைக்கும் இந்திய அரசியல் சட்டம் வாய்ப்புத் தருகிறதெனில் அது அவரின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாயிற்று! தானே வடித்த அரசியல் சட்டமாயினும், அது சரியாகச் செயல்படுவதும், தவறாகப் பயன்படுவதும் ஆள்வோரின் கைகளில் தான் இருக்கிறது என்பதை நேர்மையின் உறுதியோடு அறிவித்தவர்! ஆளும் பார்ப்பனியக் கும்பலால் அதே சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரானதாக மாறும் போது அதைக் கொளுத்துவதிலும் முதல் ஆளாய் நான்தான் இருப்பேன் என்று அவர் அறிவித்த போதும் அதே அரிமாவின் கர்ச்சனை! நினைத்ததைச் செய்ய முடியாத போது இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்ற பெருமையையும் உதறி எழுந்து, மக்களையும் தட்டி எழுப்பிய கதிரவன்! அவர் தான் ”வடநாட்டுப் பெரியார்” என்று வரலாற்றால் பெருமையோடு அழைக்கப்படும் அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்!

அம்பேத்கரின் புகைப்படத்தை மட்டும் காட்டி, அவரை தங்களில் ஒருவராக செரிக்கத் துடிக்கும் பார்ப்பன இந்துத்துவ சதிக்கு நடுவில், அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கையை எடுத்துச் சொல்லி, ஜாதிக்கெதிராகத் திரண்டெழுந்து அதை ஒழிக்க முரசு கொட்டி நின்ற அவரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டுசெல்லக் கிடைத்த பேராயுதம் தான் ”அம்பேத்கர்” திரைப்படம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் குழுமத்தின் தயாரிப்பில் ஜபார் பட்டேலின் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ”டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2010 டிசம்பர் 03-ஆம் தேதி வெளிவந்துள்ளது. அம்பேத்கர் (தமிழ்) திரைப்படத்தின் வெளியீடே ஒரு பெரும் போராட்டத்தின் பின்னான வெற்றியாகும். அவ்வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நமது நன்றிகள் உரித்தாகும்.


படிப்பெல்லாம் உங்களுக்கு ஏறாது.. அறிவுக்கும் உங்களுக்கும் ஆயிரம் காதம் தொலைவு என்றும், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் படிப்பைக் கொடுக்காதே என்றும் தீண்டப்படாத குலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களிலிருந்து கிளர்ந்தெழுந்த அறிவுக் கதிரவனாம் அம்பேத்கரின் படிப்பு, அறிவுத்தேடலுக்கான அமெரிக்க வாழ்க்கையோடு தொடங்குகிறது அம்பேத்கரின் வரலாறு. அதற்கு முந்தைய காட்சியிலும், ஓவியங்களின் வாயிலாகவும் ஜாதிக் கொடுமையால் மக்கள் பட்ட அவதியைத் தெளிவாகக் காட்டிவிட்டுத்தான் தொடங்குகிறது படம். படிப்பு முடிந்ததும் பரோடா அரசில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையோடு கூடிய அவ்வரசின் நிதியுதவியில் பொருளாதாரத் துறையிலான தன் படிப்பையும், ஆய்வையும் மேற்கொண்டிருக்கும் அம்பேத்கரின் கடினமான உழைப்பையும், அறிவாற்றலையும் வியப்புடன் நோக்குகிறார்கள் உடன் பயில்வோரும், பேராசிரியர்களும். அங்கே கருப்பர்களுக்கெதிரான அநீதியைக் காணும் அம்பேத்கர், இந்தியாவில் ஜாதியின் பெயரால் இதனினும் கொடுமையான சூழல் இருப்பதைத் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 

இதற்கிடையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறும், அமெரிக்காவில் இருந்தபடி அதற்குக் குரல் கொடுக்குமாறும் மாணவர் அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் லாலா லஜபதி ராய் அழைக்கிறார்.  தன் படிப்பைக் காரணம் காட்டியும், இந்திய சுயராஜ்ஜியம் எவ்வளவு முக்கியமோ, அந்தப் போராட்டத்தை விடக் கடுமையான போராட்டத்தை ஜாதி ஒழிப்புக்கும், வர்ணாசிரம ஒழிப்புக்கும் நடத்த வேண்டும் என்ற தனது உணர்வாலும் ராயின் அழைப்பை மறுக்கிறார் அம்பேத்கர். 

அம்பேத்கரின் சிந்தனைப்போக்கு அங்கேயே தெள்ளெனத் தெரியத் தொடங்குகிறது. படிப்புக்கும், குடும்பத்துக்குமாக தொடர்ந்து நடக்கும் வாழ்க்கைப் போராட்டத்திற்கு மத்தியில் தனது இளமைக்காலத்தில் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் பெற்ற அவமானமும், கொடுமைகளும் அம்பேத்கரின் மனதில் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தின் தேவையை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. உதவித் தொகை நின்று மீண்டும், இந்தியா திரும்பியதும், பரோடா அரசுப் பணியில் அவர் சந்திக்கும் சவால்களும், படித்த, அறிவுள்ள ஒருவனுக்குத் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் என்ற ஒரே காரனத்தினால், இந்து மதத்தினராலும், பிற மதத்தினராலும் இழிவுபடுத்தப்பட்டு, வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளும் மறுக்கப்படுவதிலும், அவரது உறுதிப்பாடு பன்மடங்காகிறது.

பின்னர் சாகு மகராஜின் உதவியால் தன் மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்து, வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் பத்திரிகை தொடங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போராட்டக் களம் அமைத்து, சட்ட ரீதியாகப் போராடுதல் என அவரின் பணி வேகமெடுக்கிறது. மகர் குளத்தில் அனைத்து மக்களும் குடிநீர் பருகலாம் என்ற அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையோடு அவர் மக்களைத் திரட்டிக் களம் இறங்குவதும், பின்னர் ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் போது கூட, “ஆலய நுழைவை விட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெறுவது தான் நமது முக்கிய நோக்கம்” என்று தெளிவாக அரசியல் ரீதியாகப் போராடுவதும் மிகச் சிறப்பாகப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது.


இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் காந்தியும் காங்கிரசும் செய்த துரோகங்களையும், வர்ணாசிரமத்தை ஆதரிக்கும் காந்தியின் மனோபாவத்தையும் துணிச்சலாகப் பதிவு செய்திருக்கிறது படம். தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி வழங்குவது என்ற அம்பேத்கரின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்தித் தந்த வாய்ப்பையும், உண்ணாவிரதம் என்ற பெயரில் சூழ்ச்சி செய்து காந்தியார் பறித்த துரோக வரலாற்றை படம் மிகத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் அம்பேத்கரின் உறுதிப்பாட்டை ஆதரித்தும், காந்தியின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக்கூடாது என்று வலியுறுத்தியும் ”காந்தியின் உயிரை விட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையே மேலானது” என்று இந்தியாவிலேயே தனி மனிதராகக் குரல் கொடுத்து, அம்பேத்கருகுக் கரம்கொடுத்த தந்தை பெரியாரின் பங்களிப்பை படத்தில் நம்மால் காணமுடியவில்லை. அம்பேத்கர் தனி மனிதரல்ல.. அவருக்குப் பின்னால் மக்கள் மட்டுமல்ல... மாபெரும் படையின் தலைவராம் பெரியார் என்னும் பேருரு இருந்தது என்பதைப் பதிவு செய்தல் எவ்வளவு முக்கியமானது. அதை செய்யத் தவறியிருப்பது ஒரு வரலாற்றுப் பிழையே! 

ஆயினும், அம்பேத்கரின் எழுத்துகளே பெரும்பாலும் வசன வடிவம் பெற்றுள்ளதால் ஒவ்வொரு வசனமும் ஆயிரம் முறை உரத்துச் சொல்ல வேண்டிய கருத்துடையனவாகும். திரைப்படம் எனும் போது முழு வாழ்க்கை வரலாற்றை மூன்று மணிநேரத்திற்குள் செறிவாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் இயக்குநர் ஜாபர் படேல். ”அடடா... அம்பேத்கர் இவர் தானோ!” என்று வியக்கும் வகையில் ஏற்ற கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார் மம்முட்டி. அவரது தோரணைகளாலும், பார்வைக் கோணங்களாலும், சமூக அநீதியைக் கண்டு தெறிக்கும் விழிகளாலும் அப்பப்பா.... அம்பேத்கரை நேரில் பார்த்த உணர்வைப் பெற முடிகிறது.  கலை இயக்கம், ஒளிப்பதிவு எனத் தேர்ந்த கலைத் தன்மை கொண்டதாகவும், அம்பேத்கரின் மனைவி ரமாபாயின் கதாபாத்திரம் ஏற்ற சோனாலி குல்கர்னி, காந்தியின் சூழ்ச்சிப் பார்வையை மிகச் சரியாகப் பொருத்தி நடித்த நடிகர் என தேர்ந்த நடிகர்களாலும், பன்னாட்டுத் தரம் பொருந்தியதாக உள்ளது படம். தமிழ் மொழியாக்கமும் தெளிவாக இருக்கிறது. 

கடும் போராட்டத்திற்குப் பின்னும், விடாப்பிடியாக முயற்சித்து தமிழில் வெளிவரக் காரணமான என்.எப்.டி.சி-யின் சென்னை கிளை அதிகாரிகளைப் பாராட்ட வேண்டும். ஆனால் இதன் வெற்றி நம் கையில்தான் இருக்கிறது. தமிழகத்தின் பெருநகரங்களில் மட்டும், அதுவும் சொற்ப திரையரங்குகளில் பகல்காட்சியாக மட்டும் வெளிவந்திருக்கும் அம்பேத்கர் திரைப்படத்தை குடும்பம் குடும்பமாகச் சென்று பார்ப்பதும், முழுமையாக ஓடும் வகையில் அதனை வெற்றியடையச் செய்வதன் மூலமாகவும் நமது தலைமுறையில் ஓர் எழுச்சியை உருவாக்கவும், அடுத்த தலைமுறைக்கு புரட்சிச் சிந்தனையை விதைக்க வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இப்படத்தைக் காட்டச் செய்து அம்பேத்கரை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது தமிழக அரசின் கடமையாகும். ஏற்கெனவே அம்பேத்கர் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கு ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சத்தை வழங்கி, அம்பேத்கர் மீதும் அவர் கொள்கைகள் மீதும் தனக்குள்ள ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்தியிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியையும் திறம்படச் செய்து முடிப்பார் என்பதில் நமக்கு எள்ளளவும் அய்யமில்லை. 

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் தமிழர்கள் இப்படத்தைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருக்கிறார். தமிழர்களே! நீங்கள் பார்த்துவிட்டீர்களா - ”அடக்கப்பட்ட மக்களின் அரிமா”வாம் அம்பேத்கர் வரலாற்றை?இல்லையேல் இன்றே விரைந்திடுங்கள்.. மற்றவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்!
நன்றி: உண்மை டிசம்பர் 16-31. 2010

Saturday, October 16, 2010

பீப்லி லைவும் எந்திரனும்

உரிந்து தொங்கும் ஊடகங்கள்
பெருநகரங்களின் சாலைப் பணிகளைச் செய்யவும், கட்டிட வேலை செய்யவும் குறைந்த கூலிக்கு சாரைசாரையாக வடநாட்டிலிருந்து வந்து குவிகிறார்களே.. சென்னையின் உணவு விடுதிகள் தொடங்கி தனியார் பாதுகாப்புப் பணிகள் வரை நீக்கமற நிறைந்திருக்கும் இவர்களெல்லாம் இதற்கு முன்பு எங்கிருந்தனர்? சித்தாள், கொத்தனார் என்று இதற்கு முன்பு பணி செய்த தமிழ்நாட்டுக்காரர்களெல்லாம் குறைந்து போய், இத்தனை பணிகளுக்கும் எங்கிருந்து இவர்கள் கொண்டு வரப்படுகின்றனர்? உலகமயம் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டில் தொழிற்சாலை, அலுவலகங்கள் கட்டவேண்டியிருப்பதால், திடீரென்று பெருகிப்போன கட்டுமானத் தொழில் பணிகளுக்கென்றே திடீரென்று தோன்றியிருக்கும் சமூகமா? வர்ணாசிரமப் பிரிவினையில் இவ்வளவு பெரிய மக்கள் திரள் எத்தனையாவது சமூகம்- அல்லது ஏற்கெனவே இவர்களுக்கு இடப்பட்ட பணிகளை கிருஷ்ண பகவான் மாற்றிவிட்டாரா?

இந்தக் கேள்விகளுக்கு அவற்றிற்குள்ளேயே அடிப்படை பதில் இருக்கிறது, ஆம், உலகமயமாக்கல். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை, கட்டுமானத்தொழிலை வளர்த்துவிட்டது... ஆனால் இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமான விவசாயத்தை அழித்துவிட்டது. விதர்பாவிலிருந்து வளமான வயநாடு வரை விவசாயிகள் தற்கொலை பெருமளவில் நடைபெற்றது. பிரதமரால் துக்கம் விசாரித்து உதவித் தொகை தர மட்டும் தான் முடிந்தது. விவசாயிகள் தற்கொலைக்கான அடிப்படைக் காரணத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை; அல்லது அவர் புரிந்து கொள்ள முயலவில்லை. எம்.பி.ஏ எக்கனாமிஸ்டுகளால் தொழில் வளர்ச்சி என்று பல்லவி பாடி முதலாளிகளிடம் தான் சரணம் தேட முடியும். விவசாயத்தின் மரணத்திற்கா காரணம் தேடமுடியும்?

இப்படி இருக்கும் சிக்கல்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய ஊடகங்கள் என்ன செய்கின்றன? காய்கறிகளைக் கூடைகளில் சுமந்து போய் விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப்போல நின்ற இடத்திலிருந்து உலகம் முழுமைக்கும் நேரடியாக செய்தி சொல்ல வல்ல பெரிய தோசைக்கல் மாதிரி டிஷ் ஆண்டனாக்களுடன் கூடிய வசதியான வாகனங்களை வைத்துக்கொண்டு அலையும் ஊடகங்கள் என்றைக்காவது இத்தகைய பிரச்சினைகளை சமூக அக்கறையுடன் அணுகியிருக்கின்றனவா? பெருகிப் போயிருக்கும் செய்தி ஊடகங்கள், எங்கேனும் ஒரு துரும்பு கிடைக்காதா அதை ஊதிப் பெரிதாக்கி ஓரிரு நாட்கள் செய்தியை ஓட்டலாம் என்று கருதிக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் உண்மையான உயிர்நாடிப் பிரச்சினைகள் அவர்களின் கவனத்திற்கு வருவதில்லையா? அதெப்படி இருக்க முடியும்? கண்டிப்பாக கவனத்தில் வரும். ஆனால் மக்களின் கவனம் இதிலெல்லாம் போய்விடக் கூடாது என்பதில் அவர்களின் கவனம் இருப்பதால் ஷில்பா ஷெட்டிகளையும், அமிதாப், அபிஷேக், அய்ஸ்வர்யா வகையறாக்களையும் மட்டுமே தலையாய பிரச்சினைகளாக மக்கள் மூளையில் திணித்துவருகின்றன.


இதையெல்லாம் கடந்து சூடான பிரச்சினையாக விவசாயிகள் தற்கொலை அவர்கள் கண்ணில் அகப்பட்டால் என்னாகும்? என்ற கேள்விக்கான பதில் தான் ”பீப்லி (லைவ்)”. இந்திய ஊடகங்களின் உண்மைத் தன்மையை அவர்களின் சமுதாய அக்கறையை தெளிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கும் படம். இந்தித் திரையுலகின் மிக முக்கிய நடிகரும் நல்ல திரைப்படங்களை மக்களுக்குத் தரவேண்டுமென்கிற அக்கறை கொண்டவருமான அமீர்கானின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்.

முக்கிய பிரதேசத்தின் பீப்லி கிராமத்தில் வசிக்கும் விவசாயி நத்தாவைச் சுற்றி நடக்கிறது கதை. சொந்த நிலத்தை அடகு வைத்து வாங்கியிருக்கும் கடன் தொடர்பாக வங்கியிலிருந்து அழைப்பு வந்ததால், நத்தாவும், அவரது அண்ணன் புட்டியா-வும் வங்கிக்குச் சென்று திரும்புவதில் தொடங்குகிறது படம். நிலத்தை வங்கி எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற கேள்வி நிறைந்த கவலையோடு வீடு திரும்புகிறார்கள் இருவரும். நிலையை எடுத்துச் சொன்னதும், திட்டி வெளியே அனுப்புகிறாள் நத்தாவின் மனைவி. என்ன செய்வது என்ற கவலையோடு, உள்ளூர் அரசியல்வாதியின் உதவியை நாடிச் செல்கின்றனர் இருவரும். இடைத்தேர்தல் பணிகளில் இருக்கும் ஆளும் சமந்தா கட்சி அரசியல்வாதியும் அவரது அல்லக்கைகளும், ‘தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு அரசு 1 லட்சம் உதவித் தொகை தருவதாக யாரோ சொன்னதாக’ச் சொல்லி, அப்படி வேண்டுமானால் குடும்பத்தைக் காப்பாற்றலாமே என்று கிண்டலடிக்க, அதை உண்மையென்று நம்பி தற்கொலை செய்தாவது குடும்பத்தைக் காப்பது என்று முடிவுக்கு வருகிறார்கள் சகோதரர்கள். ”நான் செய்கிறேன்; நான் செய்கிறேன்” என்று இருவரும் மாறி மாறிப்பேசி, இறுதியில் தம்பியான நத்தா தற்கொலை செய்வதென்று முடிவாகிறது.

மற்றொருபுறம் வியாபாரப் போட்டி காரணமாக டி.ஆர்.பி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் அய்டிவிஎன் மற்றும் பாரத் லைவ் ஆகிய தொலைக்காட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில் நத்தாவின் தற்கொலை முடிவை இவர்கள் டீக்கடையில் பேசுவதைக் கேட்கும் உள்ளூர் பத்திரிகையாளர் ராகேஷ், இச்செய்தியை நாளிதழில் வெளியிடுகிறார்.  இதனைப் பார்த்து அய்டிவிஎன்-ன் நட்சத்திர செய்தியாளர் பீப்லி கிராமத்திற்கு வந்து நத்தாவைப் பற்றி செய்தி வெளியிடுகிறார். அடுத்தடுத்து அனைத்து தொலைக்காட்சிகளும் பீப்லி கிராமத்தில் குவிந்து நத்தா தற்கொலை செய்து கொள்ள இருப்பதை வெளியிடுவதில் மும்முரமாகின்றன. இதன் மூலம் தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த தொலைக்காட்சிகள் குவியக் குவிய திருவிழாக் கோலம் காண்கிறது பீப்லி.


நேரடி ஒளிபரப்பு மூலம் நத்தாவின் இரவு பகல் அத்தனை நிகழ்வுகளையும் ஒளிபரப்புகின்றன சேனல்கள். அரசுக்குப் பாதிப்பாகப் போய் இடைத்தேர்தல் முடிவு பாதிக்கப்படலாம் என்பதால் இதைத்தடுக்க ஆளுங்கட்சி முயல, அதே நேரம் இதை வைத்தே ஆதாயம் பெற எப்படியாவது நத்தா தற்கொலை செய்துகொண்டுவிட வேண்டும் என்று காய் நகர்த்துகிறது எதிர்க்கட்சியான ’அப்னாதளம்’. நிறுவவதற்கான செலவுத்தொகை தராமல் வெறும் அடி பம்பு ஒன்றினை அரசு வழங்கிச் செல்ல, வண்ணத்தொலைக்காட்சி ஒன்றினை வழங்கிச் செல்கிறார் மற்றொரு வேட்பாளர்.

காலைக்கடன்களை முடிக்க கொல்லைக்குச் சென்றாலும் பாதுகாப்புக்கு போலீஸ், தொடர்ந்து படம் பிடித்து தொல்லைதரும் தொலைக்காட்சிகள் என நத்தாவின் வாழ்க்கை வேறுவகையாகிவிடுகிறது. திடீரென அவர் ஆளுங்கட்சியில் உள்ளூர் அரசியல் வாதியால் கடத்திவைக்கப்பட்டுவிட, நத்தாவைத் தேடத் தொடங்குகின்றன அனைத்து ஊடகங்களும். கடைசியாக நத்தா ’கக்கா’ போனது இங்குதான் அதற்கான அடையாளத்தை தெளிவாகக் காண முடிகிறது என்கிற ரீதியில் தொலைக்காட்சி சேனல்கள் அலசுகின்றன. நத்தா இருக்கும் இடத்தை அறிந்து அய்டிவின்-இன் செய்தியாளருடன் அவ்விடத்திற்கு ராகேஷ் போக, அரசு இயந்திரமும், அனைத்து ஊடகங்களும் அங்கு விரைய, கடத்தி வைத்தவர்கள் தப்பிக்க முயல, நிகழும் களேபரத்தில் தீவிபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்து போகிறார். இறந்தவர் நத்தா தான் என அரசு உறுதிப்படுத்திவிட, அனைத்து ஊடகங்களும் மூட்டை கட்டிவிடுகின்றன. உள்ளூர் செய்தியாளர் ராகேஷ், தனது செல்பேசியை எடுக்கவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டு அய்டிவிஎன் செய்தியாளரும் சென்றுவிட, சில மாதங்கள் கழிந்த பின்னரும் நத்தாவின் குடும்பத்திற்கு உதவித் தொகைகள் எதுவும் கிடைக்கவில்லை.


காரணம், நத்தா தற்கொலை செய்து கொள்ளவில்லை; விபத்தில் இறந்ததால் உதவித் தொகை கிடையாது என்று அரசு கைவிரித்துவிட்டதாக, நத்தாவின் மனைவியிடம் புட்டியா சொல்கிறார். நத்தாவின் குடும்ப நிலை இப்படி இருக்க.. இவர்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ ஒரு நகரத்தின் கட்டுமானப் பணியாளர்களில் ஒருவராக கையில் மண்வெட்டியோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் நத்தா. ’ஜோலா மாண்டிக் கேரா’ என்ற நாட்டுப்புறப் பாடலுடன் 1991-2001க்கிடையில் மட்டும் 80 லட்சம் இந்தியர்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு சென்றிருப்பதாக சென்சஸ் அறிக்கை தகவல் குறிப்புடன் படம் முடிகிறது.

படத்தின் இயக்குநர் அனுஷா ரிஷ்வி என்டிடிவி-யில் செய்தியாளராகப் பணியாற்றிய பெண். ஊடகத்தின் உச்சபட்ச நோக்கத்தினை தெளிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ரிஷ்வி. படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலானோர் நாடகத் துறையிலிருந்து வந்தவர்கள். இயல்பான அவர்களது பங்களிப்பை நடிப்பு என்று நம்மால் சொல்லிவிட முடியாது. தொழில்மயமாக்கல் தான் விவசாயிகளின் சிக்கலுக்குத் தீர்வு என்று கருத்து சொல்லும் மத்திய வேளாண் அமைச்சர், எந்தத் திட்டத்தையாவது சொல்லி தான் தப்பிக் கொள்ளப் பார்க்கும் முதலமைச்சர், கோர்ட் முடிவுக்குக் காத்திருக்கிறோம் என்ற பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லும் அய்.ஏ.எஸ் அதிகாரி என ஒவ்வொரு கதாபாத்திரமும் செவிட்டில் அறைவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் கரித்துக் கொட்டும் கிழவி, உயிருடன் இருப்பவர்களுக்கு எதுவும் தராமல் செத்தபின்தான் அரசு உதவும் போலும் எனக் கிண்டலடிக்கும் டீக்கடைக்காரர் என சின்னச் சின்ன இடங்களிலும் படத்தை ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.

’விவசாயிகள் தங்கள் தொழிலை விட்டு மாறவே கூடாது; வர்ணாசிரமம் விதித்திருக்கும் கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் வேறு தொழிலுக்கு போய்விடக் கூடாது; வயல்வெளிகளிலேயே கிடந்து உழல வேண்டும்; கிராமங்கள் அழிந்துவிடக் கூடாது’ என்பதல்ல நமது விருப்பம். குலத் தொழிலிருந்து வெளியே வாருங்கள்; கிராமங்களை மறந்து நகரங்களுக்கு வாருங்கள்; கிராமங்களை நகரங்களாக்குங்கள் என்றழைத்தவர் பெரியார். ஜாதிக் கட்டுமானத்திற்கு அடிப்படையாக கிராமச்சூழல் விளங்குகிறது என்பதால் அவற்றிலிருந்து வெளியேறவும் தாங்கள் விரும்பும் தொழிலைச் செய்யும் உரிமை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதும் தான் அதன் அடிப்படை. அவர்கள் விரும்புவது விவசாயமாக இருக்கும் நிலையில், அடிமைகளாக இல்லாமல், தத்தமது சொந்த நிலங்களில், அல்லது மேம்பட்ட பணியாளர்களாகவோ இருக்கும் உரிமையும் அவர்களுக்கு வேண்டும்.

தமிழகத்தின் சூழலுக்கு பீப்லி லைவ் கதை பொருந்தாமல் போகலாம். 7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, 2 ஏக்கர் நிலம், இலவச மின்சாரம், இலவச பம்ப் செட் என்றெல்லாம் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு திட்டங்களை வகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கலைஞர் அரசின் சாதனைகளால் இந்தியா முழுமையும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தமிழகம் தப்பியது, ஆனால் இதைப் போன்ற உயிர்நாடிப் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இல்லை. அவற்றில் கவனம் செலுத்தும் திரைப்படங்களும் தமிழில் வராமல் இல்லை. இந்தித் திரையுலகில் அமீர்கான் போன்றோர் செய்யும் இப்பணியை தமிழ்நாட்டிலும் இனவுணர்வும், திரைக் காதலும் கொண்ட பலர் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அத்தகைய திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டு ஊடகங்கள் எத்தகைய வரவேற்பை, விளம்பரத்தை அளித்திருக்கின்றன என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

கடந்த சில நாட்களாக திரும்பும் இடமெல்லாம் ஒரே ஒரு படத்தைத் தூக்கிவைத்து பேசிக்கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள். இவை உருவாக்கியிருக்கும் பிம்பத்தினால், ஒருவேளை இப்படத்தைப் பார்க்காவிட்டால் நம்மை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துவிடுவார்களோ என்று கருதும் மனநிலைக்கு வந்திருக்கிறான் சராசரித் தமிழன். சும்மா ’சூப்பர் ஸ்டார்’ தும்மினாலே அட்டைப்படத்தில் போடும் நமது பத்திரிகைகளுக்கு மத்தியில், நாளிதழ்கள், வார இதழ்கள், பண்பலை வானொலிகள், தொலைக்காட்சிகள் என பெரும் ஊடகங்களைத் தம் கையிலும், எஞ்சியவற்றைத் தம் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க முயலும் நிறுவனம் படத்தின் தயாரிப்பாளராக இருந்துவிட்டதால் நிலையை சொல்லத் தேவையில்லை. சந்தேகமில்லாமல் தொல்லையின் உச்சத்தில் உங்களைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கும் அந்தத் திரைப்படத்தின் பெயர் ’எந்திரன்’ என்று சொல்லி மீண்டும் உங்களை அலர்ஜிக்கு உட்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டுகிறோம்.

ஒன்றா இரண்டா? எத்தனைப் படங்களிலிருந்து திருட்டு? பை செண்டினல் மேன் படத்தின் கதை என்று ஒரு பக்கம்.




எனது கதையைத் தான் படமாக்கியிருக்கிறார்கள் என்று ஆர்னிகா நாசர் என்ற தமிழ் அறிவியல் சிறுகதை எழுத்தாளர் ஒரு பக்கம். இன்னும் பார்க்கப் பார்க்க நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படங்கள் நினைவுக்கு வருகின்றன. பின்னணியில் இருக்கும் ஒரு ரோபோட் படத்தைக் கூட, ஒரு கணினி ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து திருடியிருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் அம்பலப்பட்டுவருகிறார்கள்.

 

இவர்கள் தான் திருட்டு டிவிடி-க்கு எதிராக குண்டர் சட்டம் பாய வேண்டும் என்கிறார்கள். எளிய திரைப்படங்களைக் காப்பாற்ற திரைத்துறை விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், டிக்கெட் விலைக் கட்டுப்பாடுகள் இப்படி எல்லாவற்றையும் தாண்டி, ஊடக முற்றுரிமையை உருவாக்கியதைப் போன்ற இந்தப் படத்திற்கு மற்ற ஊடகங்களும் ஜால்ரா தட்டி வரவேற்கின்றன என்பது எவ்வளவு கேவலம்?


ஹாலிவுட் திரைப்படக்காரர்கள் வாயில் போட்டு மீண்டும் மீண்டும் மென்று, அரைத்து, குதப்பித் துப்பிய அரதப் பழசான கதையைத் தூக்கிவைத்துக் கொண்டு, அதற்குக் கோடிக் கணக்கில் செலவு செய்து, உச்சநட்சத்திரங்களைக் கொண்டு நிரப்பி, ’இப்படம் பார்க்கவில்லையென்றால் நீ மனிதனாகப் பிறந்ததே வேஸ்ட்’ என்ற ரீதியில் விளம்பரங்கள் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்; அதை அனைத்து ஊடகங்களும் வெட்கமில்லாமல் வரிந்துகட்டி ஆதரிக்கிறார்கள் என்றால் தமிழர்களை மடையர்களிலும் கேடான மடையர்களாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா  பொருள்? நாம் எத்தகைய படங்களை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம் மீண்டும் ஒரு முறை உறுதிசெய்து கொள்ளுதல் நல்லது.

பீப்லி லைவ் ஊடகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது என்றால், எந்திரன் படத்தின் மூலம் ஊடகங்கள் தாங்களே நிர்வாணப்பட்டு நிற்கின்றன என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது.

Sunday, May 23, 2010

அங்காடித் தெரு



தமிழ்நாட்டின் பரப்பளவில் மூன்று கோடியே 20 லட்சத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ள 10 மீட்டர் அகலமும் 405 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு குறுகலான தெருவில் இருந்து மட்டும் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு 10 சதவிகிதத்திற்கு குறையாமல் விளம்பரம் வருகிறது என்றால் சந்தேகமில்லாமல் அது சென்னை தியாகராயர் நகர், ரங்கநாதன் தெருவிலிருந்து தான்!

மாம்பலம் - தியாகராயர் நகர் தொடர் வண்டி நிலையத்திற்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கும் இடையில் அமைந்திருக்கும் அந்தத் தெருவில் தான் சென்னையின் மக்களின் பெரும்-பகுதியினரின் பேஷன் மாற்றம் நிர்ணயிக்கப்-படுகிறது. நெரிசலான பல மாடிக் கட்டடங்-களிலும், சின்னச் சின்ன சந்துகளிலும், பொந்துகளிலும் உள்ள கடைகளில் பணியாற்றுவோர், தெருவின் இரு ஓரங்களிலும், மத்தியிலும் நீளமாக 'தெருவே உலகம்; ஊனுடம்பே கடை' என தானே விற்பனையக-மாக மாறிப்போய் வியாபாரம் செய்வோர் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையும் இந்தத் தெருவில் தான் எந்த மாற்றமும் அற்று ஓடிக்கொண்டிருக்கிறது.


சென்னையில் வசிப்போர் இந்த இடத்தை-யோ, அதன் நெருக்கத்தையோ அறியாமல் இருந்திருக்க முடியாது. ஒரே கடையில் எல்லாவற்றையும் 'அள்ளிக்' கொள்ளும் வாய்ப்புக்காகவும், தங்களுக்குப் பிரியமான நட்சத்திரங்கள் பரிந்துரைக்கும் கடை என்பதற்காகவும், நட்சத்திரங்கள் விளம்-பரங்களில் தோன்றி அழகாக்கிய (அழுக்காக்கிய) உடைகளை தாங்களும் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் ஒவ்வொரு நாளும் அங்கு கூடுவோர் ஆயிரம். வண்ண வண்ண துணிகளை அணிந்து நிற்கும் பொம்மைகளை, அந்த உடைகளுக்காக பார்த்த அவர்கள், எப்போதாவது அக்கடையில் இயந்திர பொம்மைகளாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்திருப்பார்களா? இயக்குநர் வசந்த பாலன் பார்த்திருக்கிறார். அதுதான் "அங்காடித் தெரு".

சென்னையில் முழுதும் குளிரூட்டப்பட்ட 5 மாடிக் கட்டடத்தில் இயங்கும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் கடையில் வேலைக்கு ஆள் எடுப்பதற்காக திருநெல்வேலி ஜங்சன் அருகில் நடைபெறும் சிறப்பு முகாமில், எப்படியேனும் தேர்வாகி வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் குவிந்திருக்கும் இளைஞர்களில் ஜோதிலிங்கமும் ஒருவன். ஆள் இல்லா லெவல் கிராசிங்கில் ரயிலில் சிக்கிச் சிதறிய ஆட்டோ விபத்தில் தந்தையை இழந்ததால், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, தான் முடித்த 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு மேல் படிப்புக்கு வழியின்றி குடும்பத்தைக் காக்க வேலை தேடியவன். அவன் நண்பன் மாரிமுத்துவோ, தேர்வில் தோல்வியடைந்து சினேகா அக்கா இருக்கும் ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் 'அப்பா சந்நியாசம் போய்விட்டதாக'க் கூறி பணியில் சேர்ந்திருப்பவன். 'நம்ம ஆளுகளா பார்த்து எடுங்க. அப்பா இல்லாதவன், அக்கா, தங்கச்சி இருக்கிறவனாப் பாத்து வேலைக்கு எடுங்க. அப்பத்தான் பொத்திக்கிட்டு வேலை பார்ப்பானுங்க' என்ற தகுதிகளின் அடிப்படையில் தான் ஆள் தேர்வு நடைபெறுவதால் படிப்பு கவலை இல்லை. 'எச்சிக்கையை ஓட்டினா ஆயிரம் காக்காய்' கிடைக்கும் வாய்ப்பிருந்தும், தேரிக் காட்டில் கிடந்துழலும் 'நம்ம' பயலுகளுக்கு தன்னா-லானதை செய்யும் பேருள்ளத்தோடு இவர்களை 'கொத்தடிமை' வேலைக்கு எடுத்துக் கொள்கிறார் அண்ணாச்சி.

ஆம். சேல்ஸ் 'மேன்' வேலை என்று தான் சொல்லி அழைத்து வருகிறார்கள்... ஆனால் மனிதனாய் மதிக்கத்தான் யாரும் இல்லை. சிறையினும் கொடிய அவர்களின் அன்றாட வாழ்க்கை திரையில் விரிகிற போது-தான், இப்படியும் இருக்குமா என்று சந்தேகக் கண்ணோடு வியக்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால், "நான் காட்டியது கொஞ்சத்திலும் கொஞ்சமே.. மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னால் இதை மட்டும்தான் காட்ட முடிந்தது" என்கிறார் இயக்குநர்.

ஆண், பெண் இரு பாலரின் கடுமையான உழைப்பு, ஒரு நிமிடம் ஓய்வென்றோ, களைப்பென்றோ அமர்ந்தாலும் அவர்கள் சந்திக்கும் அடி, உதை, பாலியல் தொல்லைகள் என்று காட்சிக்குக் காட்சி, அந்தக் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நவீன கொத்தடிமைகள் அனுபவிக்கும் கொடுமைகளி-லிருந்து சில பருக்கைகள் மட்டுமே காட்டப்-படுகிறது. வகை தொகையில்லாமல் நடக்கும் இந்த வன்கொடுமைகள் வெளித் தெரியாமல் இருக்க காவல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட ஒவ்வொரு துறைக்கும் 'கொட்டி அழும்' அண்ணாச்சியின் துயரம்(!?) கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நின்று கொண்டே பணியாற்றியதால் ரத்தக்-குழாயில் கெட்ட ரத்தமெல்லாம் சேர்ந்து வெரிக்கோஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரைக் காட்டும் போது ஒரு நிமிடம் நாம் உறைந்து தான் போகிறோம். செந்தில் முருகன் ஸ்டோர்ஸில் மட்டுமல்லாமல், அந்த அங்காடித் தெருவில் காலத்தை ஓட்டும் பல்வேறு கதாபாத்திரங்களின் வழியே குட்டிக் குட்டிச் சிறுகதைகள் திரைக்கதைக்குள் வந்துபோ-கின்றன. பிச்சையெடுத்து வாழ்ந்துவந்த வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி, தான் கட்டிக்-கொண்ட முன்னாள் பாலியல் தொழிலாளியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை தன்னைப்-போலவே வளர்ச்சி குறைவற்று இருந்துவிடக்-கூடாது என்று கடவுளை வேண்டியிருக்க பிறந்த குழந்தையோ அவரைப் போலவே இருக்கிறது. மிகுந்த சோகத்தோடு செல்லும் அவரது நிலைக்கு மாறாக மிகுந்த மகிழ்ச்சியோடு செல்லும் அவரது மனைவி அதற்கு சொல்லும் காரணம் மனிதர்களின் உணர்வுகள் எப்படி-யெல்லாம் இருக்கின்றன என்பதற்கு ஓர் அற்புதமான சான்று.

ஒரே அறையில், புரண்டு படுக்கக்கூட இடமின்றி, சரக்கு மூட்டைகளைப் போல் சாய்ந்துகிடப்பதையும், அண்டா சோற்றுக்குள் தட்டை விட்டு அதற்குள் போட்டியிடும் 20 தட்டுகளிடமிருந்து தட்டி விடாமல் சோற்றை எடுக்கும் சாமர்த்தியத்தையும், ஒரு நிமிடம் தாமதமானாலும் ஒரு ரூபாய் பிடிக்கப்படும் சம்பளத் தொகையை முழுதாக வாங்கி வீட்டுக்கு அனுப்ப அவர்கள் பொறுத்துக்கொள்ளும் அத்தனை வதைகளையும் அதன் கோரம் குறையாமல் வெளிச்சமிடுகிறது படம். ஒரே ஒரு புடவை எடுப்பதற்காக 'இதே கலர்ல' வேற என்னென்ன இருக்கோ எடுத்துப் போடுங்க..' என்று கேட்கும் போது, இரண்டுக்கு மேல் மாதிரி எடுத்துப் போடாத கடைப் பணியாளர்-களை நோக்கி எப்போதும் எரிச்சல் பார்வையைப் படரவிடும் வாடிக்கையாளர்-களுக்கு அந்த சலிப்புக்கான காரணம் இனி தெரியக் கூடும்.


முதன்மைக் கதாபாத்திரங்களான கனி (அஞ்சலி), ஜோதிலிங்கம்(மகேஷ்), கங்காணி (இயக்குநர் ஏ.வெங்கடேஷ்), அண்ணாச்சி (பழ.கருப்பையா) மற்றும் கனியின் தோழியாக வந்து இறந்துபோகும் செல்வராணி, மாரிமுத்து ஆகியவற்றை ஏற்றிருக்கும் அனைவரும் வெகு அழகாக தங்கள் பங்கைச் செய்துள்ளனர். வீட்டு வேலைக்கு என்று விடப்பட்டுள்ள கனியின் தங்கை பருவமடைந்துவிட அதை தீட்டு என்று நாய் கட்டியிருக்கும் இடத்திற்கு அருகில் அடைத்து வைத்திருக்கும் ஆச்சாரமான மாமியின் மனிதாபிமானம்(?!) இளங்குருத்துகள் சந்திக்கும் சொல்லொண்ணா சிக்கல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. வேலைக்கு வந்த இடத்தில் விருப்பம் ஏற்பட்டு வேலைக்கு பங்கம் வந்துவிடாமல் தவிக்கும் தவிப்பு, கடுமையான சூழலில் வெளி-யேற்றப்பட்டு, இரவு தங்குவதற்கு இடமின்றி பாதுகாப்பற்ற சூழலில் அலைந்து திரிதல் என இருட்டுப் பக்கங்களிலிருந்து விடுபட்டு, ரிமோட் கவர் விற்றுக் கிடைத்த வருவாயில் மகிழ்கின்றனர் கனியும், லிங்குவும் (ஜோதிலிங்-கமும்). கட்டட வேலை செய்வோர் இரவு உறங்கும் உதயம் தியேட்டர் அருகில் சாலைக்கு வந்து அங்கு தங்கள் இருப்பிடத்தை அமைத்துக்கொள்கின்றனர்.


இரவு ரம்மியமானது சிலருக்கு; நிம்மதியானது சிலருக்கு; இனிமையானது சிலருக்கு! அதிலும் கொசு, மின்வெட்டு என்று கொஞ்சம் இடைஞ்சல் ஏற்பட்டாலும் சகலரையும் சபிக்கிறோம். ஆனால், இரவு படுக்க இடமின்றி, இன்றைக்கு உறக்கம் சாலையிலா, பாலத்துக்கு அடியிலா, சாக்கடைக்குப் பக்கத்திலா என்று சாக்குப்பையைத் தேடி அலையும் ஏதுமில்லா-தோருக்கு? இதற்கு நடுவில் தான் அவர்களின் காதலும், வாழ்க்கையும். ஒரே காட்சிதான் உலுக்குகிறது உண்மை. சாலையோரம் படுத்துறங்கும் தொழிலாளர்-களின் மீது லாரி ஏறி ரத்தச் சகதியாய் மாறிய இடத்திலிருந்துதான் தொடங்குகிறது படம். இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்வுதான்! ஆனால், அதை கதாநாயகன் கனன்று எழுவதற்கான காரணமாகக் காட்டி கதநாயகனை உயர்த்திப்பிடிக்கும் வழக்கமான படங்களைப் போலல்லாமல், மனதில் தைக்கும் விதமாக அந்த உண்மையை உணர்த்தியிருக்-கிறார். கால்களை இழந்து நிற்கும் சேர்மக்-கனியைத் தன் துணையாக ஏற்று, வாழ்க்கையைத் தங்களை நம்பித் தொடங்குகின்றனர். அடுத்தவர் கடையில் வேலை தேடித் தேடி அலையாமல், தொழில் செய்யத் தொடங்கி ஒரு நேர்மறையான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.

இந்த நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய மற்றொன்று - அமைப்பு சாராத இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை. பணி நிரந்தரம், உரிய ஊதியம், உரிமைகளைக் கேட்கக் கூட முடியாமல் தவிக்கும் அல்லது தங்களுக்கென்று உரிமைகள் இருக்கின்றன என்பது கூடத் தெரியாத இந்தத் தொழிலாளர்களுக்காக ஒரு குரல் எழும்ப வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துகிறது. செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்பது கற்பனைப் பெயராக இருக்கலாம்; அல்லது ஏதோ ஒரு கடையை உங்களுக்கு நினைவுபடுத்துவதாக இருக்கலாம். ஆனால் இது ஏதோ ஒரு கடையில் மட்டும் நடப்பதல்ல; ரங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல என்பதை நாம் உணர வேண்டும். தமிழரின் வாழ்க்கையைப் பதிவு செய்யத் தவறிய தமிழ் சினிமாக்களின் மத்தியில், முக்கிய பதிவுகளில் ஒன்றாக வெளிவந்திருக்கிறது அங்காடித் தெரு.


வாழ்க்கையின் பக்கங்களில் வெகு இயல்பாக நாம் கடந்துபோகும், காண மறுக்கும், உணராமல் தவிர்க்கும், நெஞ்சைச் சுடும் நிஜங்-களை இயல்பான கதையோட்டத்தில் அமைந்த நேர்த்தியான திரைக்கதையோடு கண் முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் வசந்த பாலன். வரலாறுகள் எல்லாம் வெற்றிபெற்றோரைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்போது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்திலும் தோல்வியடைந்தவனைப் பற்றிப் பதிவு செய்த இவரது "வெயில்" திரைப்படம் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த புதிய பரிமாணம். 'அங்காடித் தெரு' வசந்தபாலனுக்கு ஒரு புதிய பரிணாமம்.
- சமா.இளவரசன்

உண்மை மே 01-15 2010