Tuesday, July 17, 2007

அபோகலிப்டோ

உலகிலேயே மனித இனம் ஒன்றுதாள் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் பண்புடையது.. இன்று பொருளுக்கும் பணத்துக்கும் மதத்துக்கும் நாட்டுக்கும் அடித்துக் கொண்டு மரித்துப் போகும் மனித இனம் தன் ஆரம்ப நாள்களிலும் குழுவாகப் பிரிந்து சண்டையிட்டது. காடுகளும் இயற்கையும் அழியாமல் இருந்த காலத்தில் காடுகளுக்குள் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் குழுவாகப் பிரிந்திருந்தனர். இத்தகைய குழுக்களின் தொகுப்புக்கென தனித்ததொரு நாகரிகமும் இருந்தது. அத்தகைய தொன்மையான நாகரீகங்களில் ஒன்று மாயன் நாகரிகம்.

இயற்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டு விடாமல் கற்கருவிகளை அதிகம் பயன்படுத்திய காலத்தில் நடக்கிறது கதை. காட்டுப் பன்றியை வேட்டையாடும் தீவிரத்தோடு தொடங்கும் படம் இரத்தமும் சதையுமாக (உண்மையாகவே) நகர்கிறது. உணவுக்கான வேட்டை-யாடுதலில் பன்றியைப் பங்கிடும் கதாநாயகன் கருஞ்சிறுத்தை பாதம் (Jaguar paw) அதன் இருதயத்தையும் பிற உறுப்புகளையும் அறுத்தெடுத்து பிரித்துக் கொடுக்கும்போது தோன்றும் முதல் அருவருப்பு போகப் போக விறுவிறுப்-பாகி விடுகிறது. உணவும் இனப்-பெருக்கமும் மட்டுமே முக்கியத் தேவை-களாயிருந்த காலத்தில் வாழ்ந்த அந்தக் கூட்டத்தின்மீது மற்றொரு கூட்டம் நடத்தும் திடீர்த் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் உடல் வலுவானவர்கள் மட்டும் பிடிக்கப்பட்டும் விற்பனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கடவுளுக்கு பலியிடுவதற்காக வாங்கப்படும் அவர்கள் ஒவ்வொருவராக நரபலியிடப்படுகின்றனர்.

இவர்களை அழைத்துச் செல்லும்போதே உயரிய மேடையின் படியில் ஏதோ உருட்டி விடப்படுவது காட்டப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் மேலே அழைத்துச் சொல்லப்பட்டபின்தான் உருட்டி விடப்பட்டவை பந்துகளோ கற்களோ அல்ல தலைகள் என்ற உண்மை நம்மை உறைய வைக்கும். பலியிடப்படுபவர் உடலிலிருந்து ஒரே குத்தில் இருதயம் உருவப்படும்போது முதலில் பன்றிக்கு நிகழ்ந்தது நம் நினைவுக்கு வந்து விடுகிறது.

கதாநாயகன் வெட்டப்பட இருக்கும்போது தோன்றும் சூரியக் கிரகணத்தால் கடவுளின் அணை என்று கூறி அவனையும் அவன் தொடர்ந்தோரையும் விட்டு விடுகிறார்கள். விற்பனைக்கு அழைத்து வந்தவர்களை வீணாக அனுப்ப முடியுமா குறி பார்த்து எறிந்து பழகி விளையாடுகிறார்கள் அழைத்து வந்தவர்கள். மற்றவர்கள் மாண்டு விட தப்பிச் செல்லும் நாயகன் இவர்களின் தொடர் வேட்டையையும் தாண்டி தான் மறைத்து வைத்துவிட்டு வந்த மனைவியையும் குழந்தையையும் தேடிச் செல்கிறார்.மாயன் நாகரிக மக்களின் மொழி புரியத் தேவையில்லை; என்னும் அளவுக்கு இயற்-கையின் பிரம்மாண்டத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் காட்சியில் உணர்த்துகிறார் இயக்குநர் மெல்கிப்சன். வரலாற்றுக் கதைகளை தொடர்ந்து எடுத்து வரும் மெல் கிப்சனின் இந்தப் படம் 2006 இறுதியில் அமெரிக்காவில் வெளியானாலும் இந்தியாவில் இந்த மாதம்தான் வெளியிடப்படுகிறது.

உரிய ஆய்வுக்குப் பிறகே எடுக்கப்பட்டிருப்-பதாக சொல்லப்பட்டாலும் விமர்சனங்களும் எதிர்வினைகளும் தொடர்ந்து வருகின்றன. கணிதத்திலும் வானியலிலும் சிறந்திருந்த மாயன் நாகரித்து மக்களை காட்டுமிராண்டிகளாகவும் ரத்த வெறி பிடித்தவர்களாகவும் காட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் பொங்குகிறார்கள். அமாவாசை அன்றுதான் சூரிய கிரகணம் வரும் என்பதுகூட தெரியாமல் சூரியகிரகணம் தோன்றிய அன்றே முழு நிலவு தோன்றுவதாக காட்டப்படும் அளவுக்கு தெளிவற்ற படம் என்றும் கொலம்பஸ் வருகைக்கு முந்திய மக்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும் எதிர்க்குரல் எழுந்திருக்கிறது.

கதை நிகழும் காலத்தில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையெனப்படுகிறது. ஏனெனில் முந்தைய மாயன் நாகரிகத்தில்தான் பிடுமிடு போன்ற அமைப்புடைய கட்டடம் இருந்தது. நாடு தேடிப் புறப்பட்ட கப்பல்கள் வந்து சேர்ந்தது பிந்தைய மாயன் காலத்தில் இரண்டும் காட்டப்படுவதால் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது.

பள்ளத்துக்குள் மனைவியும் குழந்தையும் ஒளிந்திருக்க மழை கொட்டி பள்ளம் நிரம்பத் தொடங்குகிறது. நிறைமாதக் கர்ப்பிணியான அவள்தன் மகனைக் காக்க அவனைத் தோளில் தூக்கியபடி இருப்பவருக்கு பிரசவ வலி வருகிறது. முக்கி முனகும் பெண் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடியே குழந்தையைப் பெற்றெடுக்கும் காட்சி ஒரு நிமிடம் நம்மை ஆட்டி விடுகிறது.

கதையின் நிறைவுக் காட்சிகளில் கதாநாயகனை எதிரணியினர் இருவர் துரத்தி வருகின்றனர். மூவரும் எதிரில் ஏதோ புதிதாய் ஒன்று இருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். எதிரில் கப்பல் ஒன்று வந்து நிற்கிறது. கப்பலை அது வரை பார்த்தறியாத எதிரணியினரும் மிரண்டு நிற்க நாயகன் மீண்டும் தப்பி மனைவி குழந்தைகளை அடைகிறான். பின்னர் அது என்னவென்று கேட்கும் மனைவியிடம் "என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதில் மனிதர்கள் வந்திறங்கினார்கள் என்கிறார் நாயகன். நாம் அதை நோக்கிப் போகலாமா எனக் கேட்கும் மனைவியிடம் `வேண்டாம். நம் காட்டை நோக்கி சென்று புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம் என்று மீண்டும் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறான்.

அந்தக் கப்பல் அவர்களை மட்டுமல்ல தங்கள் ஒட்டு மொத்த தங்கள் இனத்தையே அழிக்கப் போகிறது என்பதை அறியாமலேயே!

- சமா.இளவரசன்,

Tuesday, July 03, 2007

மூடநம்பிகையை வளர்க்கும் சந்திரமுகி

இதுவரை வெளிவந்த ரஜினி படங்களைப் போலல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமாகவும், இது ரஜினி படமல்ல, ரஜினியும் நடித்திருக்கும் படமாகவும் பத்திரிகைகளாலும் ஊடகத்தினராலும் அறிமுகப்படுத்தப்படுகிற படம் ‘சந்திரமுகி’. ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு ‘சந்திரமுகி’ என்று பெண் பெயர் வைக்கப்பட்டபோதே, தனது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் பெயராக சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துக் கொண்டிருந்தவரிடம் ஏற்பட்ட மாற்றமாகவும் கருதப்பட்டது. மேலும், தொடர்ந்து தன்னைச் சார்ந்தவர்களின் பெயரில் தானே தயாரிப்பாளராகவும் இருந்து வசூலை மூட்டை கட்டிய ரஜினி, சிவாஜி குடும்பத்தினரின் தயாரிப்பில் நடிக்க, தானே முன் வந்து ஏற்பாடு செய்ததும் வியப்பாகப் பேசப்பட்டது.
கஷ்டப்படும் சிவாஜி குடும்பத்திற்கு கை கொடுக்கும் முகமாகத்தான் இந்த உதவியை ரஜினி செய்கிறார் என்ற கருத்தும் காற்று வாக்கில் கலந்துவிடப்பட்டது. ஆனால் இத்தனை செய்திகளுக்கும் பின்னணியில் இருப்பது, ‘பாபா’ படம் கண்ட மாபெரும் தோல்வி மற்றும் எதிர்ப்பு என்பதை மக்களும் உணராமல் இல்லை.
தன் சொந்த பேனரில் படத்தைத் தயாரித்தால் படத்திற்கு எதிர்ப்புக் கிளம்புமோ என்ற எண்ணம் தான், சிவாஜி குடும்பத் தயாரிப்பு என்னும் பெயரில் படம் செய்யக் காரணம். அதுவும் ‘கஷ்டப்படும்’ சிவாஜி குடும்பம் என்ற அடைமொழியையும் கொடுத்து பரிதாப உணர்ச்சியை பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டு விட்டதாகவும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
மேலும் அவர்கள் கூறும் பழைய நிகழ்வு ஒன்று உதவிக் கரம் நீட்டும் சந்திரமுகத்தாரின் மற்றொரு முகம் காட்டுகிறது. படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்த சிவாஜி, அதே போல் தங்கள் தயாரிப்பில் ரஜினியும் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது (கமல்ஹாசனுக்கு தேவர் மகனில் நடித்துக் கொடுத்து, ‘கலைஞன்’ படத்தை தங்கள் தயாரிப்பில் தயாரித்ததுபோல) தனது அடுத்த படத்தின் தயாரிப்பில் ஈடுபடும் பத்துபேரில் ஒருவராக சேர்ந்துகொள்ளுமாறு ரஜினி தந்த பதில் கேட்டு, சிவாஜி வாயடைத்துப் போனார் என்கிற பழைய பத்திரிகைக் குறிப்புகளையும் காட்டுகிறார்கள் அவர்கள்.திரைப்படத்தை விமர்சித்து விட்டுப் போகாமல் பின்னணிகளைப்பற்றி ஆராய வேண்டியதற்கும் ஒரு பின்னணி உண்டு. மேற்கண்ட செய்திகளெல்லாம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் சரியானதா என்பதுதான் அது. ‘மணிச்சித்திரத்தாழ்’ மற்றும் சில படங்களின் தழுவல். ‘பஞ்ச்’ டயலாக் இல்லாத படம் என்றெல்லாம் கூறப்படும் விமர்சனங்களைப் போலன்றி நாம் கவனம் செலுத்தப்போவது மனோதத்துவ இயல் நிபுணராக வந்து ‘ஆவி’ விரட்டும் பணியில் ஈடுபடும் ரஜினியின் சரவணன் கதாபாத்திரம் பற்றித்தான்.
தன்னைப் படிக்க வைத்து வளர்த்த செந்தில்நாதன் (பிரபு) குடும்பத்தார் புதிதாக வாங்கியிருக்கும் வேட்டையன் ராஜாவின் அரண்மனை பற்றிய வசந்திகளைப் பற்றிப் படித்து தெளிந்து விட்டு, அவர்கள் அங்கே தங்க அனுமதி தருகிறார் சரவணன். பூஜை புனஸ்காரங்களுக்குப் பிறகு வேட்டையபுரம் அரண்மனையில் குடியேறுகிறார்கள் பிரபுவும், ஜோதிகாவும் (கங்கா).
வேட்டையன் ராஜா, தன் ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள விரும்பிய ஆடற் கலை நாயகிதான் சந்திரமுகி. சந்திரமுகியோ மற்றொரு ஆடற் கலைஞன் குணசேகரனை விரும்புவது தெரிந்த வேட்டையன் சந்திரமுகியின் கண்முன்னே காதலனைக் கொன்றுவிட்டு, ‘லக்க லக்க லக்க’ சொன்னபடியே சந்திரமுகியையும் உயிரோடு எரித்துக் கொன்று விட்டு, பின்னர் சில காலத்தில் மடிந்து விட்டதாக அந்த அரண்மனையின் கதை விவரிக்கப்படுகிறது. அவளது ஆவி அந்த அரண்மனையில் உள்ள பின் மாடியின் தெற்கு அறையில் உலவுவதால் அங்கே யாரும் செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
ஆனாலும் குறும்புக்காரப் பெண்ணான கங்கா (ஜோதிகா) அந்த ரகசியத்தை அறிய பழைய ‘பெரியவர்களின்’ பேச்சையும் மீறி அவ்வப்போது உள் நுழையத் தலைப்படுகிறார்.
ரஜினி வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் சந்திரமுகியின் அறைக்குள் நுழைந்துவிடுகிறார் ஜோதிகா. அது முதல் தொடங்குகிறது நிறைய பிரச்சினைகள். பிரச்சினைகளைத் தீர்க்க சரவணா (ரஜினி) தோன்றுகிறார்; துப்பறிகிறார்; அங்குள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களோடு விளையாடுகிறார்; வடிவேலுவை பயமுறுத்துகிறார்.
ரஜினியின் ஆதரவோடு நாசர் மகளுக்கும், எதிர் வீட்டு ஆடற்கலைஞனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அந்த நிகழ்வின் முடிவில் வினித் (ஆடற்கலைஞன்) ஜோதிகாவிடம் தவறாக நடக்க முயல்வதாகப் பிடிபடும்போது, தவறு ஜோதிகா மேல்தான் என்று ரஜினி உண்மையைத் தெரிவிக்க, கோபம் கொள்ளும் பிரபு உள்ளிட்ட வீட்டுக்காரர்கள் வழக்கமான ரஜினி படம் போல அவரை விரட்டுகிறார்கள். அப்போது அதைத்தடுத்து உண்மையை விளக்குகிறார், ஏற்கெனவே அழைத்து வரப்பட்ட மந்திரவாதி. ஒரு தலையில் 10 மூளை கொண்டவரும், உலகின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணரின் முதன்மைச் சீடருமான இவரையா (ரஜினியை) விரட்டுகிறீர்கள் என்று கேட்டுவிட்டு, தன் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்திருக்கும் ரஜினியின் தியாக சொரூபத்தை அனைவருக்கும் காட்டுகிறார். ரஜினியும் தன் தியாக முகத்தை அனைவருக்கும் காட்டுகிறார்.
சிறுவயது முதலே பல்வேறு நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது மனநிலை குழம்பியவராக வாழ்ந்து, அதை மறக்க, குறும்புக்காரராக மாறிவிடுகிற ஜோதிகா, சந்திரமுகி அறைக்குள் நுழைந்து அவளால் கவரப்பட்டு, தன்னை சந்திரமுகியாக நினைத்து, சந்திரமுகியாக நின்று, சந்திரமுகியாக மாறிவிடுகிறார். இதற்கு Spilit personality என்று அறிவியல் பெயர் என்றும், அந்த சந்திரமுகியாக மாறுகிற ஜோதிகா எதிர்வீட்டு வினித்தை தன் காதலன் குணசேரகரனாகப் பார்க்கிறார். அதற்குத் தடையாக இருப்போரைக் (மாளவிகா, பிரபு) கொல்ல முயற்சிக்கிறார். வேட்டையன் ராஜாவாக ரஜினியை நினைத்து, துர்காஷ்டமி அன்றைக்கு ரஜினியைக் கொன்று பழிதீர்க்க சந்திரமுகியாக மாறிவிட்ட ஜோதிகா துடிக்கிறார். தான் அழிந்தால்தான் சந்திரமுகி ஜோதிகாவிடமிருந்து விடுபடுவார் என்று முடிவு சொல்லும் ரஜினி, தான் தியாகம் செய்யத் தயாராகவும், அதே சமயம் ஜோதிகாவை விடுவிக்க Psychosis-லிருந்து புதிய முறையைக் கையாளப் போவதாகவும் கூறிவிட்டு, வேட்டையன் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு பழைய ‘பரட்டை’ காலத்து ரஜினியாக மாறிவிடுகிறார். இறுதியில் ரஜினிக்கு பதில் வேட்டையன் ராஜாவின் பொம்மையை ஆள்மாற்றம் செய்து எரித்து, சந்திரமுகியின் கோபத்தைத் தணித்து, ஜோதிகாவை விடுவிக்கிறார்.
“Slowly you are getting conscious” என்று இப்போது தன் மனோதத்துவ மருத்துவப் பாணியைக் கையாண்டு வெற்றி பெறுகிறார். தன் ஜோடியோடு பழையபடி ‘Repeat’ பாடலைப் பாடிக்கொண்டு விடைபெறுகிறார். சரி, வருவோம். சந்திரமுகியின் கதாபாத்திரத்தால் கவரப்பட்டு ஜோதிகா Spilit personality-க்கு ஆளாகிறார் என்றால், விடுவிக்கப்பட வேண்டியது ஜோதிகாவா? இல்லை ஜோதிகாவிடம் இருந்து சந்திரமுகியா? ஜோதிகா தானே விடுவிக்கப்பட வேண்டியவர். சந்திரமுகியின் ஆசையைத் தீர்த்து அவரை ஜோதிகா உடலிலிருந்து விடுவிக்கவே போராடுகிறார் ரஜினி.
மந்திரவாதி, என்னால் முடியாததை மனோவியல் மருத்துவர் ரஜினி செய்ய முடியும் என்று சொல்கிறார். ரஜினியோ மந்திரவாதியின் பக்கபலமும் அவசியத் தேவை என்று துணைக்கழைக்கிறார். சந்திரமுகியின் ஆசையைத் தீர்த்து, ஆவியை வழியனுப்பி வைக்கும் பழைய ‘டெக்னிக்’குக்கு மனோவியல் என்று புதிய முலாம் பூசுகிறார்கள். அப்படியானால் மந்திரவாதி என்ன செய்கி றார்? தனது சிஷ்யர்களை வைத்து பெரிய ரங்கோலிக் கோலம் போட்டு அதன் நடுவில் சந்திரமுகியாகத் துள்ளும் ஜோதிகாவைப் பிடித்து அமுக்குகிறார். மந்திரவாதிக்கே உரிய தோரணையோடு “யார் நீ?” என்று மிரட்டலாக கேள்வி கேட்கிறார். சரி, மந்திரவாதி முயற்சியால்தான் ஜோதிகா விடுவிக்கப்படுகிறார் என்றால், ரஜினியோ மனோதத்துவ நிபுணரின் தோரணையோடு, “உன் பெயர் என்ன?” என்று அமைதியாகக் கேட்கிறார்.
எதனால் விடுவிக்கப்பட்டார் ஜோதிகா? தெளிவில்லை. ‘என்னதான் அறிவியல் என்றாலும் மந்திரங்களெல்லாம் வேண்டும்’ என்கிற பழைய பல்லவியைத்தான் ‘Repeat’ செய்கிறார்கள். பாபா - நாத்திகம் பேசி ஆத்திகனானார். சரவணன் - அறிவியல், மருத்துவம் பேசி மந்திரத்தை நாடுகிறார். வழக்கமான ரஜினிபோல், “எனக்கா தெரியாது?” என்று வரிந்துகட்டி ‘தத்திந்தோம்’ என்று சங்கீதம் பாடுகிறார். பெண்களைப் பற்றிக் கவலைப்படும் ஆண்களின் மனதைப் படிக்கிறார் (Mind Reader) . அவர்கள் வயிற்றில் புளி கரைக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பு பாவமாகக் காட்சி தருகிறார் (வழக்கம்போல). இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார். பார்க்கும் பெண்களையெல்லாம் வலையில் விழ வைக்கும் வல்லமை பெற்றிருக்கிறார். என்னதான் புதுசாக செய்திருக்கிறார்? வழக்கம்போல ரஜினியின் ராசிக்காக ‘பாம்பு’ ஒன்று வந்து போகிறது 30 அடியில். எக்ஸ்ட்ரா பிட்டங்கா, ஆங்காங்கே pshyco, pshycic என்று ஆங்கில வசனம் பேசுகிறார். வேறு புதிதும் இல்லை. புதுமையும் இல்லை. பெண் வில்லியாக அகிலாண்டேஸ்வரி வருகிறார். எதற்கென்று கடைசி வரை தெரியவில்லை.
“எந்தத் தொழில் செய்தாலென்ன

செய்யும் தொழில் தெய்வமென்று”
பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னதை repeat செய்திருக்கிறார் ரஜினி. நாமும் ஒரு பட்டுக்கோட்டையார் பாடலை repeat செய்வோமா?

“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க - அந்த
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே”
- என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
ரிப்பீட்டு!

ஒத்தை ஆள் ஓட்டப்பந்தயம் - பவானந்தி

‘அதோ வர்றார்’ ‘இதோ வர்றார்’ என்று இவர்களும், ‘நான் எப்ப வருவேன்; எப்படி வருவேனெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தக்கு கரெக்டா வருவேன்னு’ அவரும் அள்ளி விட்டுக்கிட்டு இருக்க, ‘அப்போ வரும், இப்போ வரும்’-ன்னு இழுத்துக்கிட்டு இருந்த படமும் வரப்போகுதாம்.அடாடாடா! இந்தப் பத்திரிகைகாரனுங்களுக்குப் பொறுக்க முடியலைப்பா!
சிவாஜி மொட்டை போட்டிருக்காரு.... சிவாஜி கொட்டை போட்டிருக்காரு... சிவாஜி-ல 6 பாட்டு, 7 பைட்டு (அடப் பண்ணாடைங்களா, எல்லா எழவு படத்திலயும் ‘அது தாண்டா இருக்கு’) 72 குட்டிகளோட வெளிநாட்டுல டான்ஸ்-ன்னு தினம் தினம் செய்தி. சந்திரமுகி படத்தில வந்த லாபத்தில நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்துக்கு உதவுற நோக்கில அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ச்சு கோடி ரூபாய் கொடுத்துட்டு, ஏதோ தனக்காக வெறும் 23 கோடி மட்டும் தான் எடுத்துக்கிட்டாருன்னு சேதி வருது. பாபா-வுல ஏற்பட்ட பயத்தில தான் சிவாஜி குடும்பத்தின் பெயரில படம் பண்ணா, பிரச்சனை இருக்காதுன்னு முடிவு செஞ்சு செய்ததுதான் ‘சந்திரமுகி’ங்கிறது ஊரறிஞ்ச ரகசியம். அதிலயும் பிரச்சினை வந்துடக் கூடாதுங்கிறதுக்காகத் தான், சிவாஜி குடும்பத்துக்கு உதவுற நோக்கத்தில பண்ணதுன்னு ஒரு செய்தியப் பரப்புனதே! (ஏதோ சிவாஜி புள்ளைங்களை தவிக்கவிட்டுப்போனது மாதிரியும், இவரு தூக்கி நிறுத்தினது மாதிரியும் ஒரு பில்டப்) அவரு உதவுனது எப்படின்னு பிரிச்ச லாபத்திலயே தெரியுதே!.
அதே மாதிரி சரிஞ்சு போன ஏ.வி.எம்.-மைத் தூக்கி நிறுத்தத்தான்னு இந்தப் படத்துல நடிக்கிறார்னு சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது.
படம் 150 கோடிக்கு வித்திருக்கு... 200 கோடிக்கு வித்திருக்கு... 600 பிரிண்ட் போட்டிக்கு... ஜேம்ஸ்பாண்ட் படத்தை விட அதிகமா மொத்தம் 4,500 தியேட்டரில ஓடப்போகுது... தலைவரின் உலக சாதனை.அப்படின்னு தெருக்கோடில நின்னு செ.கு.செ. அனுப்பிச்சிட்டிருக்கான் நம்ம பய. கோடியில புரள்ற இவுங்க படத்தை வித்துட்டு பக்காவா இருக்க, இந்தப் பத்திகைக்-காரனுக பக்கம் பக்கமா செய்தி போட்டு பரப்பரப்புன்றானுங்க.மோர் அபிஷேகம், பால் அபிஷேகம், பீர் அபிஷேகம், டிக்கெட் வாங்கப் பெரிய கியூ. இதுக்கெல்லாம் எட்டுக் காலத்துக்கு செய்தி! ‘சிவாஜி’ டிக்கெட் வாங்கி சாதனை செஞ்சவங்க டிக்கெட்டோட போஸ் கொடுக்கிற மாதிரி போட்டோ கால் பக்கத்துக்குன்னு ஒரே அலப்பறையைக் குடுக்கறானுங்க.படத்தைப்பத்தி ரகசியத்தை வெளியிட்டுட்டாராம் ரஜினி. படம் ‘கருப்புப் பணத்தை ஒழிக்கிறது பத்தியாம்’. ‘யப்பா... வாயால சிரிக்க முடியலப்பா....’ கருப்புப் பணத்தைப் பத்தி யார் பேசுறது.. ரஜினியும், ஷங்ரும், ஏ.வி.எம்.முமா?
அப்படின்னா சங்கராச்சாரி ஒழுக்க வாழ்வைப் பத்தியும், ஜார்ஜ் புஷ் கம்யூனிசத்தைப் பத்தியும், ஆர்.எஸ்.எஸ். அகிம்சையப் பத்தியும் பேசினாலும் நம்ம கேக்கத்தான் வேணுமா? அடப்பாவிங்களா.சரி, படம் இத்தனை கோடி, அத்தனை கோடிங்கிறாங்களே, வருமான வரித்துறையென்ன வரிசையிலயா நிக்குது டிக்கெட் வாங்க?
கோடம்பாக்கத்தில மத்த படத்தோட நிமையையெல்லாம் என்னன்னு பார்த்தா, நல்ல தியேட்டர்களை இவங்க மொத்தமா எடுத்தக்கிட, வேற தியேட்டர் கிடைக்காம, எடுத்த படமெல்லாம் பெட்டியில தூங்குது. இந்தா விடுறேன், அந்தா விடுறேன்னு புதுப்படங்களை மிரட்டி 2 மாசமா வேற படத்தையே வரவிடாமப் பண்ணதில, வட்டிக்கு வாங்கி படம் பண்ணவனெல்லாம் பொட்டிய வச்சுகிட்டு புலம்பியபடி நிக்கறாங்க.
அப்படியும் யாராவது பெரிய படத்தை ரிலீஸ் பண்ணப்போனா ‘சிவாஜி’ சமயத்தில விட்டா மத்த படம் ஓடாதுன்னு அல்லக்கை பத்திரிகைகளை எழுதவச்சு நிறுத்திப்புட்டாங்க.கூட ஓடுறவனையெல்லாம் தடுத்து நிறுத்தி ஓரங்கட்டிப்புட்டு, ஒத்தை ஆளா பந்தயத்தில ஓடி, ‘நான் ஜெயிச்சுட்டேன், நான் ஜெயிச்சுட்டேன். என்னைய அடிக்க எவனுமில்லை’ன்னு கத்துற ‘இந்தப் பொழப்புக்கு......’ வேணாம்வுடுங்க!

நன்றி: 1.உண்மை - மாதமிருமுறை இதழ்
2.மூட நம்பிகையை வளர்க்கும் சந்திரமுகி -உண்மை