Sunday, March 23, 2014

ஜாதி தின்ற சரித்திரம்: ஜெ.சி.டேனியல்

காலம் 20-ஆம் நூற்றாண்டுக்குள் புகும்போதே திரைப்படம் என்னும் ஊடகத்தின் தாக்கம் உலகிற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் முதல் படம் எடுக்கப்பட்டது 1912-இல் தாதா சாகேப் டார்னே என்பவரால். அதற்குப் பிறகு இந்தியாவின் முதல் படம் என்று இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள படமான ராஜா ஹரிச்சந்திரா வெளிவந்தது 1913 மே மாதத்தில். படத்தை உருவாக்கியவர் டி.ஜி.பால்கே. பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை என பட உருவாக்கப் பணிகள் பல இடங்களிலும் தொடங்கின.


வெளிநாட்டிலிருந்து வந்த பேசாத் திரைப்படங்களை தமிழகத்தின் ஊர் ஊராகச் சென்று காட்டினார் வின்சென்ட் சாமிக்கண்ணு. தமிழ்நாட்டின் முதல் படத்தை கீசகவதம் என்ற பெயரில் உருவாக்கினார் நடராஜ முதலியார். தமிழ் பேசாவிட்டாலும் அதுதானே முதல் தமிழ்ப் படம். இத்தகைய சாதனைகளின் தொடர்ச்சியாக 1920-களின் பிற்பகுதியில் இன்றைய தென் தமிழகமும் கேரளாவும் இணைந்த அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இத்தகைய முயற்சிகளை ஒருவர் தொடங்கினார்.
தனது 22-ஆம் வயதிலேயே சிலம்பாட்டம் குறித்து ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட அவர், அந்த சிலம்பாட்டத்தின் சிறப்பை அசையும் படமாக உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தார். அப்படி திருவிதாங்கூரின் முதல் அசையும் படத்தை உருவாக்க கனவு கண்டு, அதற்காக முயன்று ஒரு திரைப்படத்தையே உருவாக்கி வெற்றி பெற்ற அவர்தான் ஜெ.சி.டேனியல். (இன்று தமிழ்நாட்டில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர்.) அவரின் வரலாற்றைத் தான் செல்லுலாய்டு என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக உருவாக்கியிருந்தார் மலையாள இயக்குநர் கமல். செல்லுலாய்டு படத்தை கோவா திரைப்பட விழாவில் காணும் வாய்ப்புப் பெற்றேன். அது முதல் மலையாளத் திரைப்படத்தின் மறைக்கப்பட்ட வரலாறு மட்டுமல்ல; ஜாதி என்னும் கொடூரத்தின் தாக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருந்தது என்பதற்கான சாட்சி; ஒடுக்கப்பட்ட மக்களின் எத்தனையோ சாதனைகள் எப்படி ஜாதி ஆதிக்கத்தால் மறைக்கப்பட்டன _- அழிக்கப்பட்டன என்பதற்கான ஒரு சோறு பதம்; ஜாதி தின்று செரித்த சரித்திரம்.
அதன் தமிழ் வடிவம் ஜெ.சி.டேனியல் என்ற பெயரிலேயே வெளியாகியுள்ளது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
திரைப்படங்களின் மீது கொண்ட ஆர்வத்தால் படித்துத் தெரிந்துகொண்டது மட்டுமல்லாமல், பம்பாய் சென்று பால்கேவின் ஸ்டுடியோ உள்ளிட்ட இடங்களில் சுற்றி, அவர்களின் உதவியால் அடிப்படைத் தொழில்நுட்ப அறிவையும் பெறுகிறார் டேனியல். திருவிதாங்கூரின் முதல் படத்தை உருவாக்கும் பணியில் மனைவி ஜானட், நண்பர்களின் உதவியோடு ஈடுபடுகிறார். தன் குடும்பச் சொத்து, வளங்கள் அனைத்தையும் விற்று ட்ரவாங்கூர் நேசனல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். புராணப்படங்களில் மூழ்கியிருந்த அன்றைய இந்திய சினிமாவில் மாறுபட்டுச் சிந்திக்கிறார் டேனியல். பைபிளின் கதைகளிலிருந்து ஒன்றைப் படமாக எடுக்கலாம் என்ற நண்பர்களின் எண்ணத்தையும் ஏற்காமல் சமூகக் கதையொன்றைப் படமாக்க விரும்புகிறார். தொலைந்த குழந்தை என்று பொருள்படும் விகதகுமாரன் என்ற தலைப்பில் ஒரு சமூகக் கதையைத் திரைப்படமாக எடுக்கத் தொடங்குகின்றனர். 
எழுத்துப் பணிகளை நிறைவு செய்து முக்கியக் கதாபாத்திரங்களையும் முடிவு செய்தபின்னர், கதாநாயகியைத் தேர்வு செய்வதற்காக முயலும் போது அதற்கு யாரும் முன்வரவில்லை. பால்கேவைப் போல ஆணைப் பெண் வேடமிட்டு நடிக்க வைக்கவும் டேனியலுக்கு விருப்பமில்லை. எனவே, பம்பாயில் இருக்கும் நடிகைகளில் யாரையாவது அழைத்து வரலாம் என்ற திட்டத்தில் பம்பாய் சென்று ஆங்கிலோ இந்திய நடிகை ஒருவரை அழைத்து வருகிறார்கள். சம்பளம், ரயில் பயணம், கார், அரண்மனை என அவர்கள் கேட்ட அத்தனை வசதிகளையும் தன் சக்திக்கு மீறி செய்யத் தொடங்கினாலும், சாதாரணப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க அந்த நடிகை மறுக்கிறார். கடவுளாகவோ, அரசியாகவோதான் நடிப்பேன் என அடம்பிடிக்க, அவரை மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பிவிட்டு அடுத்த கட்டம் குறித்து யோசிக்கும்போதுதான் கூத்து, நாடகங்களில் நடிப்போர் குறித்து நண்பர்கள் சொல்கிறார்கள். கூத்தில் ரோசம்மாவின் நடிப்பு டேனியலை வெகுவாகக் கவர, ரோசம்மாவையே தன் படத்திலும் நடிகையாக்கிட விரும்புகிறார் டேனியல்.
ரோசம்மா
தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ரோசம்மா, (முன்பே குடும்பத்தோடு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருந்த ரோசம்மாவின் பெயர் டேனியல் மற்றும் அவர் மனைவியால் ரோசி என வைக்கப்படுகிறது) விகதகுமாரன் படத்தில் நாயர் பெண்ணாக நடிக்க வைக்கப்படுகிறாள். சிறப்பான அவள் நடிப்புடன் சில நாட்களில் அவளது பகுதி படமாக்கப்பட்டுவிட, அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பையும், படத் தொகுப்பையும் முடித்து திரையிடலுக்குத் தயாராகிறது படம். இதற்கிடையில் இன்னும் சில சொத்துகளும் டேனியலால் விற்கப்படுகின்றன. 1928-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 1930-ஆம் ஆண்டு நிறைவடைந்து, விகதகுமாரன் படம் வெளியீட்டுக்குத் தயாராகிறது. படத்தின் முதல் காட்சிக்கு அழைக்கப்படுகிறாள் ரோசி. படத்தை வெளியிட வந்த நம்பூதிரிகளும், வழக்குரைஞர் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் படத்தைப் பார்க்க கொட்டகைக்குள் நுழையும் ரோசியைக் கண்டு அருவெறுப்படைகிறார்கள். 
’ரோசம்மா’ கதாபாத்திரம்
தீண்டத்தகாதோருடன் அமர்ந்து தாங்கள் எப்படித் திரைப்படம் பார்ப்பது என மறுக்க, என்ன செய்வது என டேனியல் மருகி நிற்க, வேறு வழியின்றி படத்தின் கதாநாயகி ரோசி கொட்டகைக்கு வெளியிலேயே கண்ணீருடன் அடுத்த காட்சிக்குக் காத்திருக்க, டேனியலைப் பாராட்டி வந்தோர் பேச, படம் திரையிடப்படத் தொடங்குகிறது. சிறிது நேரத்திலேயே திரைப்படக் கொட்டகைக்குள் கூச்சல். ஒரு தாழ்த்தப்பட்ட பெண் உயர்ஜாதிப் பெண்ணாக நடிக்கவைக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஜாதி வெறியர்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அரங்கின் வாயிலில் காத்திருந்த ரோசி துரத்தப்படுகிறாள். ரோசியின் வீடு எரிக்கப்படுகிறது. ஜாதி வெறியர்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை நினைத்து, உயிருக்குப் பயந்து ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள் மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி.
சொத்துகளை சினிமாவுக்காக விற்று, அதுவும் திரையிடப்படும் இடங்களில் எல்லாம் ஜாதிவெறியர்களின் எதிர்ப்பைப் பெற, அகஸ்தீஸ்வரத்திற்கே திரும்பி, பல் மருத்துவம் கற்று மருத்துவராகிறார் டேனியல். புதுக்கோட்டையில் குழந்தைகள், குடும்பம் என்று இருப்பவரை மீண்டும் திரைப்படத் துறை நோக்கி இழுக்கிறார் தமிழ்த் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா. சென்னைக்கு திரைப்படக் கனவுகளை மீண்டும் சுமந்து கொண்டு வண்டியேறி, திரைப்பட ஏமாற்றிகளால் சொத்துகளை இழந்து, ஏழ்மை நிலைக்குச் சென்று அடையாளங்களற்று வாழ்க்கையைத் தொடர்கிறார். 
பின்னாளில் செம்மீன் படம் 1966-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்று மலையாள சினிமா பெருமையடைய, முதல் மலையாள சினிமாவை எடுத்த டேனியல் தமிழ்நாட்டின் அகஸ்தீஸ்வரத்தில் முதுமைப்பருவத்தைக் கழிக்கிறார். இதை அறியும் மலையாளத் திரைப்படப் பத்திரிகையாளரான சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், தொடர் முயற்சியில் டேனியலைச் சந்தித்து பழைய வரலாற்றை நிறுவ முயல்கிறார். டேனியலின் மகன் ஹாரிஸ் டேனியல் சிறுவயதில் விளையாட்டுப் போக்கில் விகத குமாரன் படச்சுருளை எரித்துவிட, எஞ்சியிருப்பதோ அப்படத்தின் ஒரு புகைப்படமும், விளம்பரத் துண்டறிக்கையும் தான். டேனியலுக்குப் பிறகு அவரது நண்பர் சுந்தரராஜன் எடுத்த மார்த்தாண்ட வர்மா திரைப்படமும் கடனுக்கு அடமானமாகப் போய் ஒரு கொட்டடியில் நாசமாகிக் கிடக்கிறது. அதை மீட்கிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன்.
மலையாள சினிமாவின் முதல் முயற்சிகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கோடு கேரள அரசின் பண்பாட்டுத் துறையை அணுகும் கோபாலகிருஷ்ணனுக்கு மறுப்புகளும், அலட்சியமும் பதிலாகக் கிடைக்கின்றன. பேசும் படமாக வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் பாலன் படம் தான் முதல் மலையாளப் படம் என அடம்பிடிக்கிறார் அய்.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான ராமகிருஷ்ணன் அய்யர். இந்த (டேனியல்) நாடார் விசயத்தில் உனக்கென்ன இவ்வளவு அக்கறை? என்று ராமகிருஷ்ண அய்யர் கேட்கும் போது இந்த மறுப்புக்குப் பின்னால் இருப்பதும் ஜாதியே என்று உணர்ந்துவிடுகிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன். பிராமணரான டி.ஆர்.சுந்தரத்தின் படம்தானே பாலன். நீங்கள்லாம் இந்த மாதிரி சிந்திக்கிறீங்கன்னு புரிஞ்சு போச்சு சார்! என்று போட்டு உடைத்துவிட்டுக் கிளம்புகிறார் பத்திரிகையாளர். எனினும் அவரது முயற்சிகள் தொடர்கின்றன.
எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் டேனியல் தன் இறுதி மூச்சை விட, அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. திரைப்படத்துறை மீது இன்று மக்களுக்கு இருக்கும் அளவற்ற மோகம் ஒரு நடிகரின் படத்துக்குச் செய்யப்படும் மரியாதை மூலம் உணர்த்தப்படுகிறது. அதைப் பார்த்தபடி பேருந்தில் பயணிக்கிறார் ஹாரிஸ் டேனியல் (ஜெ.சி.டேனியலின் இளைய மகன்). மேலே நீங்கள் படித்தது கதையல்ல; வரலாறு. அது ஜெ.சி.டேனியலின் வரலாறு மட்டுமல்ல; சமூகத்தில் ஜாதியின் இறுக்கம் எப்படி என்பதற்கான சான்று! ஜெ.சி.டேனியலையாவது இன்று நாம் அடையாளம் காண்கிறோம். ஆனால், மலையாளத்தின் முதல் கதாநாயகியான ரோசியின் நிலை? ஒளிவெள்ளத்தில் வாழும் இன்றைய திரைக்கலைஞர்கள் மத்தியில் அடையாளமே இல்லாமல் தென் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் தன் வாழ்வை முடித்திருப்பார் அந்தத் திறமைவாய்ந்த கலைஞர். படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமல், தனது கருத்தில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அதைப் பதிவு செய்கிறார். ஜாதியின் தீவிரம் என்னவென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு அழுந்தச் சொல்லிப் புரியவைக்கிறது படம். அக்காட்சிகளை ஒவ்வொன்றாக விவரித்தால் நிச்சயம் புத்தகமாக நீளும். பால்கே படம் எடுக்கும் போது அதைப் பார்த்து டேனியல் கற்றுக் கொள்வதாக ஒரு காட்சி. கர்ணனின் தொடையில் பரசுராமன் படுத்திருக்கும் போது கர்ணனின் தொடையை வண்டு துளைத்து ரத்தம் வழியும் மகாபாரதக் காட்சி. வர்ணாஸ்ரமத்தின் வெளிப்பாட்டை அங்கே பதிவு செய்யத் தொடங்குகிறார் இயக்குநர். 
இயக்குநர் கமலின் பதிவுகளில் எடுத்துக்காட்டாக சிலவற்றைச் சொல்லலாம். கதாநாயகியாக நாயர் பெண் வேடமணிந்து, அனைவருடனும் அமர்ந்து மதிய உணவு உண்ணாமல், தான் தூக்கி வந்த சட்டியிலிருந்து கஞ்சியைத் தரையில் அமர்ந்து அருந்தும் மனநிலையை, தங்களுக்கு அதுதான் இயல்பென்றும், விதிக்கப்பட்டதென்றும் ஒரு சமூகத்தையே கருதவைத்த கொடுமையை அக்காட்சி உணர்த்துகிறது. தான் நடித்த படத்தின் ஒரு காட்சியைக்கூடப் பார்க்க முடியாமல் துரத்தி அடிக்கப்படுகிற வலி எத்தகையது? அதுமட்டுமா, வர்ணாசிரமத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருப்பவர்களிடையே ஜாதிப் பற்றும், தீண்டாமை உணர்வும் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் பதிவு செய்கிறார். இப்படிப்பட்ட பதிவுகள் படம் முழுக்க கதையோடு பின்னிப் பிணைந்து நம் மூளையில் அவற்றை விதைத்துச் செல்கின்றன.
படத்தில் ஜெ.சி.டேனியலாக இளம் வயதிலும், முதுமையிலும், பின்னர் ஹாரிஸ் டேனியலாகவும் நடித்துள்ள ப்ருத்விராஜ், ஜேனட்டாக நடித்த மம்தா மோகன்தாஸ், ரோசியாக நடித்த சாந்தினி, சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனாக நடித்த சீனிவாசன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் உயிரோட்டத்திற்குக் காரணம். ஒரு திரைப்படத்திற்கான அத்தனை சிறப்பம்சங்களையும் பெற்று, மலையாளத்தில் வெற்றிகரமாகவும் ஓடிய இப்படம் தமிழில் அதிகம் கவனம் பெறாமல் போனது வருந்தத்தக்கதே! ஆனால், அவசியம் தேடித் தேடி பார்க்கவேண்டிய, திரையிடப்பட வேண்டிய, தொலைக்காட்சி வழியாகப் பரப்பப்பட வேண்டிய படம் இது.
ஒரு டேனியலின் வாழ்க்கையும், சாதனையும் வரலாற்றில் நிறுவப்பட வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு கோபாலகிருஷ்ணனும், கமலும் 70 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது. இன்னும் எத்தனை டேனியல்களின் சாதனை, ஜாதிக் கொடுமையால் மறைக்கப்பட்டிருக்கிறது _- மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மீட்டெடுக்க உறுதி பூணுதலே ஜெ.சி.டேனியலுக்கு நாம் செய்யும் மரியாதை.

Saturday, February 01, 2014

தலைமுறைகள்


மொத்தமாக 30 ஆண்டுகளில் 15 படங்கள் தான் தமிழில் இயக்கியிருக்கிறார் இதுவரை! ஆனால், தமிழ்த் திரையின் கதை சொல்லல் தரத்தை, ஒளிப்பதிவை, திரை மொழியை மாற்றியமைத்ததில் ஒளிஓவியர் பாலுமகேந்திராவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. 


கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது தலைமுறைகள். நாற்பது ஆண்டுகால திரை வாழ்வில் திரைக்குப் பின்னால் இருந்தே இயங்கி வந்த பாலுமகேந்திராவே படத்தின் முக்கியப் பாத்திரமேற்று, எப்போதும் எங்கும் சூடியிருக்கும் தலைப்பாகையைத் தூக்கி வைத்துவிட்டு, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சுப்பு பிள்ளையாக வாழ்ந்திருக்கிறார். 


தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளிதான் தலைமுறைகள். 12 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் படித்த, தமிழ் தெரியாத, பெற்றோரில்லாமல் வளர்ந்த ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் பெரிய மருத்துவராகத் திகழ்கிறார் சிவராமன். அடுத்தடுத்த முன்னேற்றம், புதிய மருத்துவமனை என்று வாழ்பவருக்கு, அவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீடு திரும்பியிருக்கும் சேதி சற்று தாமதமாகக் கிடைக்கிறது.

அவரைப் பார்க்கச் சொல்லி மனைவி வற்புறுத்த, காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் கிராமத்திற்குச் செல்கிறார் சிவராமன். தந்தை வரவேற்க மறுத்தாலும், தங்கையின் அழைப்பின் பேரில் வீட்டில் தங்குகிறார். 

அண்ணனின் காதல் திருமணத்தின் காரணமாக தந்தை சுப்பு பிள்ளை தன்னை விரைவாக திருமணம் செய்துவைத்துவிட்ட வருத்தத்தைப் பகிர்கிறாள் தங்கை. பெண் பிள்ளை பிறக்குமா என்ற கணவனின் எதிர்பார்ப்புக்காக, மூன்று ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு நான்காவது கருவைச் சுமந்து கொண்டிருக்கும் தங்கை ஒரு புறம் என்றால், பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் பிள்ளை என்ற ஜாதிப் பெயரையும் சேர்த்துச் சொல்லிப் பழக்கி வைத்துக் கொண்டிருக்கும் தந்தை மறுபுறம் என பிற்போக்கான மனநிலைக்குள் இன்னும் உழன்று கொண்டிருக்கும் குடும்பம் அது. 


ஜாதி, மதம் என்று பேசிக் கொண்டிருக்கும் சுப்புவுக்கு இன்னொரு மனைவி மூலமாக ஒரு மகள் இருப்பதைக் காட்டும்போது ஜாதிப் பெருமை எதுவரைக்கும் என்ற எள்ளல் இயல்பாகப் பதிகிறது. அதிலும், "வெளியில நான் சாப்பிடமாட்டேன்னு உனக்கும் உங்க அம்மாளுக்கும் தெரியாது?" என்று அண்ணன் முன்னால் எரிந்து விழும் அப்பாவைப் பார்த்து, "நல்லா தான்ணே வீட்டுல சாப்பிடுவார். இப்போ என்னமோ இப்படிப் பேசுறாரு" என்று அவள் வெட்டி ஜம்பத்தைப் போட்டுடைக்கும் காட்சி ரசிக்க வைக்கக் கூடியது. 

முதலில் மகனையே வீட்டிற்குள் விட மறுக்கும் சுப்பு, மருமகள் வந்தால் வீட்டுக்குள் சமைக்கக் கூடாது என்று மகளிடம் போடும் நிபந்தனை அவரது எதிர்ப்பு முன்பு போல் இல்லாமல் முனை மழுங்கிவிட்டது என்பதற்கு அடையாளம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேசும் மருமகளைக் கண்டு மகிழ்ந்தாலும் 10 வயதாகியும் தமிழ் தெரியாத பேரனைப் பார்த்து வருத்தம் அடைகிறார் சுப்பு. 

மகனிடம் இருக்கும் மன வருத்தத்தையும் தாண்டி, பேரனிடம் பாசம் ஏற்படுகிறது. பேரனோடு விளையாடத் தொடங்குகிறார்; பேரனுக்குக் கற்றுக் கொடுக்கிறார்; பேரனிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்; பேரனின் கேள்விகளுக்குப் பதில் தருகிறார். தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான அந்த உறவு பார்க்க அழகானது. தான் அமர்ந்து உறங்கும் சாய்வு நாற்காலியின் கைப்பிடியில் காலைத்தூக்கிப் போட்டபடி உறங்கும் பேரனை ரசிப்பதும், அவன் உள்ளங்கையில் வைத்திருக்கும் மிட்டாயை அவன் எழுந்துவிடாத வண்ணம் மெல்ல எடுத்துச் சுவைப்பதும் அழகு. 

ஆற்றைப் பார்த்திராத, ஆட்டைப் பார்த்திராத பேரனுக்குக் கிராமத்தின் எளிய வாழ்க்கையைப் பழக்குகிறார். தான் பண்பாடு என நினைக்கும் பழக்கங்களைப் பேரனுக்கும் சொல்லித் தருகிறார். அந்தக் காலத்து வாத்தியாராக, விஜயதசமி என்று கோவிலுக்குக் கூட்டிப் போய் நெல்லைக் கொட்டி, அதில் 'அ' என்று கைப்பிடித்து எழுத வைத்து தமிழ் கற்றுத் தருகிறார் தாத்தா சுப்பு! தனக்குத் தமிழ் கற்றுத் தரும் தாத்தாவுக்கு, நல்ல நாள் பார்க்காமல், நெல்லைக் கொட்டியோ கோதுமையைக் கொட்டியோ 'A' எழுதாமல் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்குகிறான் பேரன். அதற்குப் பிறகு தாத்தா கற்றுக் கொடுத்த அவை சிறுநீர் கழிக்கையில் மணலில் வரைந்து பார்க்கும் பேரனைப் பார்க்கும் போது, அய்யய்யோ வருத்தம்-கிருத்தம் படப்போகிறாரோ என்று நாம் நினைத்தால், அதற்கு மாறாக காவி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பேரனைப் போலவே தாத்தாவும் சிறுநீரில் 'அ' வரைந்து பார்ப்பதும், அதைப் பேரன் 'ரொம்ப ஷேக்கிங்' என்று சொல்வதும் இரண்டாம் குழந்தைப் பருவத்தைப் பதிவு செய்யும் காட்சிகள். ஆற்றில் குளிக்கப் பழக்குவது, தூண்டிலிட்டு மீன் பிடிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது என்று இன்றைய நகர வாழ் குழந்தைகள் தவறவிட்ட தருணங்களை நினைவூட்டுகிறது தலைமுறைகள். தாய்ப்பால் காட்சியையெல்லாம் எந்த இடையூறும் இல்லாமல் வெகு அழகாகக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.


மகள் வயிற்றுப் பேரன்களுக்கெல்லாம் "சிவகுருநாதன் பிள்ளை, சிவ... பிள்ளை, சிவ... பிள்ளை" என்று பேர்வைத்து ஜாதியோடு சொல்லப் பழக்கியவர் மகன் வழிப் பேரனுக்கும் "ஆதித்யா பிள்ளை" என்று சொல்லித் தருகிறார். அந்தப் பேரைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் பேரன் ஆதித்யா. "இந்த ஜாதி மதப் பிரிவினைக் குப்பையெல்லாம் நம்மோடவே போகட்டுமே! அடுத்த தலைமுறைக்கும் போகணுமா?" என்று பாதிரியார் எழுப்பும் கேள்விக்குப் பிறகு, தானும் அதை விட்டுவிடுகிறார் சுப்பு. 

ஒரே தடவையில் திருந்திவிட்டாரா என்று சிலர் விமர்சனத்தில் கேட்டிருந்தார்கள். இந்தக் கேள்வியை ஒருமுறை கூட யாரும் கேட்காமலேயே பலருக்குக் காலம் கடந்துவிட்டிருக்கிறதே, ஒருவரின் கேள்வி கூட சுருக்கெனத் தைக்கலாம். கிறிஸ்துவ மருமகள் எட்டுக் கிலோமீட்டர் நடந்து சர்ச்சுக்குச் சென்று வர வேண்டுமா என்று யோசித்து, தான் வணங்கும் கடவுள்களுக்கு மத்தியிலேயே ஏசு படத்தையும் வைத்து, மற்ற கடவுளரைப் போலவே பூமாலையும் போட்டு வைக்கும் அளவுக்கு சுப்புவின் மனநிலையில் பாசம் மாற்றத்தை உண்டாக்குகிறது. வயதான காலத்தில் நிகழும் மாற்றங்கள் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியாது. யாராலும் அடங்காதவர்கள் பேரனுக்காக மாறும் இயல்புகளைத் தனியே விவரிக்க வேண்டியதில்லை. வெகு இயல்பாக இவற்றையெல்லாம் பதிவு செய்கிறார் பாலுமகேந்திரா. 


கம்பீரமான தோற்றத்துடன், வீராப்புடன் திகழ்வோரெல்லாம், கால மாற்றத்தில் புதியன அறியாதவர்களாக, வயதான காலத்தில் வெகு குழந்தைகளாக மாறிப் போவதைக் கண்டிருப்போம். சுப்பு கதாபாத்திரத்திற்கு இது சரியாகப் பொருந்தும். சுப்பு என்ற கதாபாத்திரத்தைத் தாண்டி பாலுமகேந்திராவை நாம் ஒரு வேளை தேடிக் கண்டுபிடித்தோமானால், அவரின் நடிப்பு எத்தனை இயல்பாக இருக்கிறது என்பதையும் நாம் உணரமுடியும். கையைக் கையை ஆட்டிப் பேசும் பாவனைகளில் சில நேரம் செயற்கைத்தன்மை இருப்பதாக நமக்குத் தோன்றலாம்; ஆனால் மூத்தோரை மனதில் வைத்துப் பார்த்தால் சுப்புவின் பாவனைகள் நமக்குத் தனித்துத் தோன்றவில்லை.


சென்னையில் விட்டுவந்த மருத்துவப் பணியைத் தொடர விரையும் மகன் சிவராமன், கிராமத்து மக்களுக்கும் மருத்துவமனை தேவை; அதற்கு, தானே இங்கிருந்து நடத்தத் தயார் என்று சொல்லும் மருமகள் போன்ற முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், ”உங்க கல்யாணத்துக்குக் கையெழுத்துப் போட்டேன்னு எப்பவும் திட்டுவாரு.. இப்போ பார்த்தாலும் திட்டுவார்” என்று மறைந்து மறைந்து ஓடும் சிவராமனின் நண்பன், சுப்புவின் நண்பர் லட்சுமணன், இரண்டாம் மனைவியின் மகளாக வரும் சிறுமி என்று அவ்வப்போது வரும் கதாபாத்திரங்களும் இயல்பானவை _- நம் குடும்பத்தைப் போல! 

ஆங்காங்கே காட்சிகள் கோர்வை இல்லாமல் இருப்பது உறுத்தல்தான். அப்படிக் கோர்வையற்ற ஒரு காட்சித் திணிப்புதான்- கடவுள் பற்றி அவர் பேரனுக்குக் கூறும் காட்சியும். ஆற்றங்கரை வழியில் இருக்கும் பிள்ளையார் சிலையை கடவுள் என தாத்தா அறிமுகப்படுத்த, "இல்லை அது கல்லுதான்" என்கிறான் பேரன். அடுத்த காட்சியிலேயே சம்பந்தமில்லாமல், "தாத்தா என் போட்டோ" என்று ஒரு படத்தைக் கொண்டு வந்து காட்டும் பேரனிடம் இது நீயில்லை; வெறும் பேப்பர் என்று வாதாடுகிறார் தாத்தா. காட்சி நிறுத்தப்பட்டு, வளர்ந்துவிட்ட பேரனின் குரலில் "கண்ணதாசனின் தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்ற வரிகளுக்கு எனக்கு ரொம்ப காலம் கழிச்சுத்தான் அர்த்தம் புரிஞ்சுச்சு" என்று ஒரு வசனம். "என் போட்டோ" என்றும் "போட்டோவிலிருப்பது என் உருவம்தான்" என்றும் கூறும் பேரனிடம் "இது நீயில்லை" என்று நிறுவப் பார்க்கிறார் பாலுமகேந்திரா. கல்லைக் கடவுளென்றும் அதற்குச் சக்தி உண்டு என்றும் நம்பச் சொல்வதைப் போல, அந்த போட்டோதான் சிறுவன் என்பது வாதமில்லையே! போட்டோவை தங்கள் உருவத்தின் பிரதிபலிப்பாகத்தான் பார்க்கிறார்களே தவிர, அதுதான் தாம் என்று யாரும் பார்க்கவில்லை. கடவுள் விசயத்தில் பாலுமகேந்திராவின் இந்தப் பதட்டத்தை நாமும் ஓரிரு நிகழ்ச்சிகள் மூலம் அறிந்திருப்பதால் இந்தத் திணிப்பை நம்மால் உணரமுடிகிறது. அது அவசியமில்லை என்பதை அந்தக் காட்சியே உணர்த்தும். 

தேவையான அளவு, தேவையான இடத்தில் இசை. அதற்குப் பெயர் தான் இளையராஜா. மென்மையோடு நாம் பார்த்த பழைய பாலுமகேந்திரா படங்களுக்கு குளிர் பின்னணியும், பிலிமும் காரணமாக இருந்தன. இந்தப் படத்தில் டிஜிட்டலில் படமாக்கியிருப்பதால் வெளிறித் தெரியும் சில இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் நெருடலின்றி இயல்பான ஒளியமைப்புடன் கண்ணுக்கு இதமளிக்கிறார் பாலுமகேந்திரா. 

முற்போக்கான படம் என்றோ, அனைவருக்கும் அவசியமான கருத்துகளைத் தந்திருக்கும் படம் என்றோ நம்மால் இதைச் சொல்ல முடியாதுதான். ஆனால் முன்னேற்றத்தை முடக்கிவிட்டு, கிராமத்தில் முடங்குங்கள் என்று இந்தப் படம் சொல்லவில்லை; நவீன வாழ்க்கை முறையை நோக்கி விரல் நீட்டி குற்றமும் சாட்டவில்லை; வேர்களை மறந்துவிடாதீர்கள் என்று மட்டும்தான் வேண்டுகோள் விடுக்கிறது. வேர்கள் என்பது கிராமம் என்ற இடம் அல்ல; அங்கிருக்கும் மனிதர்கள் என்பதையும் படம் காட்டிச் செல்கிறது. 

ஜாதியைப் பாதியில் விட்டுவிட்ட சுப்பு, தன் கடைசி வேண்டுகோளாக தமிழை மறந்துடாதே; இந்தத் தாத்தாவையும் மறந்துடாதே என்று கோருகிற இடத்தில் படம் அதற்கான முக்கியத்தைப் பெறுகிறது. வணிகம் குறித்துப் பெரிதும் கவலைப்படாமல் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் சசிக்குமார் பாராட்டுக்குரியவர். திரை மொழியை நன்கு பயன்படுத்தத் தக்க அண்மைக் காலத்துக் கலைஞர்களெல்லாம் பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான். அதன் அடுத்த கட்டத்திற்கு இப்படம் இட்டுச் செல்லும். திரைப்படம் என்ற பார்வையில் ஆரவாரம் இல்லாமல், வணிகச் சமரசமில்லாமல், எளிமையாக இனிவரும் படங்களுக்கு இது முதல் தலைமுறை; தொடக்கம்; முதல் நெருப்பு. திரைப்படங்களை ரசிப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு!