Sunday, October 08, 2006

ஹயாத் (Hayat)

லகத் திரைப்படங்களில் ஈரானிய சினிமாக்களுக்கு தனி வரவேற்பு உண்டு. கட்டுப்பாடுகளுக்குள் இருந்து கிளர்ந்தெழும் எதற்குமே ஒரு மரியாதை இருக்கும். ஈரானியப் படங்கள் கவனிக்கப்பட்டது அப்படியாகத் தானிருந்திருக்கும். கடும் தணிக்கை நடைமுறைகள் அமலில் உள்ள நாடு ஈரான். படத்தை எடுத்தபிறகு தணிக்கை என்பது நம் நாட்டுமுறை. படத்தின் திரைக்கதைப் பிரதியை (script) தணிக்கை செய்யும் முறை ஈரானிலிருக்கிறது. இதனால் ஈரானிய இயக்குநர்கள் எடுக்கும் படங்களில் மதக் கருத்துகளுக்கு எதிராகக் கருதப் படுபவை வெளியாவதே இல்லை. எனவேதான் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மெக்மல் பஃப் போன்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து செயல்படுகின்றார்கள் என்று கூறப்படுகிறது.
“அரசின் கட்டுப்பாடுகளையும் விளக்கெண்ணெய் ஊற்றிய கண்களையும் தாண்டி, மதத்தை நையாண்டி செய்யும் படங்களும் ஈரானில் எடுக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டும் இருக்கிறது” என்று கூறும் ‘நிழல்’ ஆசிரியர் திருநாவுக்கரசு, “When I became a woman” என்ற படத்தை மேற்கோள் காட்டினார். “தன் தம்பியுடன் விளையாடிக் கொண்டி ருக்கும் சிறுமியைக் கண்டிக்கிறாள் தாய். ஏன் விளையாடக் கூடாது என்று சிறுமி கேட்க, பெரிய பிள்ளையாயிட்டா விளையாடக் கூடாது என்று பதில் சொல்கிறாள் தாய்.“நான் எப்போதிலிருந்து பெரிய பிள்ளை” என்று சிறுமி கேட்கும் கேள்விக்கு, ‘இன்று பகல் 12 மணியிலிருந்து நீ பெரியபிள்ளை’ என்று தாய் சொல்ல, “இப்போது மணி 10:20, இன்னும் 1 மணி 40 நிமிடங்கள் இருக்கின்றதே அதுவரை நான் விளையாடுகிறேன்” என்று சொல்கிறாள் சிறுமி.பகல் 12 மணி என்பதைப் பார்க்க கையில் குச்சியுடன், உச்சிக்கு வரும் சூரியனிலிருந்து குச்சியின் நிழால் விழாத நேரம் வரை விளை யாட விரும்பும் குழந்தையின் மூலம் மதத்தின் கட்டுப்பாட்டை எள்ளி நகையாடி இருப்பார் இயக்குநர்” என்றார் திருநாவுக்கரசு.
ஈரானின் தணிக்கை விதிகளின்படி, பெண்க ளின் முகம், கைகள், பாதங்கள் தவிர மற்ற பாகங்களைத் திரையில் காட்டக்கூடாது. அதே போல், காதல் காட்சிகளும் தடைசெய்யப்படு கின்றன. இவற்றால், ஈரானிய இயக்குநர்கள் குழந்தைகளை நோக்கித் தங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்.
சென்ற ஆண்டு கோவா திரைப்பட விழாவில் ‘ஹயாத்’ என்ற ஈரானிய திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அரங்கு நிறைந்த கூட்டத்தில் திரைக்கு வெகு அருகில் தரையில் அமர்ந்து... தலை தூக்கிப் பார்க்கும் கட்டாயம். அந்த வலியையும் மறக்க வைத்தது படத்தின் விறுவிறுப்பு. விறுவிறுப்பு என்றதும், துண்டாடப்பட்ட காட்சிகளோடு வில்லனை கதாநாயகன் துரத்தும் காட்சியோ என்று எண்ணிவிடவேண்டாம்.
ஹயாத், 12 வயது நிரம்பிய பள்ளி மாணவி. ஈரானின் அழகிய கிராமம் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து, பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். தன் பள்ளியில் நடக்கப்போகும் தேர்வுக்காகத் தன்னை ஒரு மாதமாகத் தயார்படுத்தி வருகிறாள். தேர்வுக்கு முந்தைய நாள் இரவு ஹயாத்தின் தந்தைக்கு உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட, அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுகிறார். தாயும் உடன் சென்றுவிட, தனது குட்டித் தங்கையை (கைக்குழந்தை) பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஹயாத்துக்கு வருகிறது.
தனக்குத் தெரிந்தவர்களிடம் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு பள்ளிக்குச் செல்லத் துடித்தாலும், உதவும் நிலையில் யாரும் இல்லை. பால் கணக்கு சொல்ல வரும் பாட்டி, பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் தம்பி, குழந்தை, தேர்வு இத்தனை சூழல்களுக்கும் மத்தியில் ஹயாத் துடிக்கும் துடிப்பு நம்மையும் பற்றிக் கொள்கிறது.
யாரிடமும் ஒப்படைக்க முடியாத நிலையில், குழந்தையைத் தூங்க வைத்து வீட்டில் பூட்டிவிட்டு தேர்வுக்குச் செல்கிறாள் ஹயாத். வழியிலேயே ‘குழந்தைக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ’ என்ற அச்சத்தில் மீண்டும் ஓடிவந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். இதனிடையே, அக்காவுக்கு உதவுவதற்காக, பள்ளியிலிருந்து, தான் தன் கால் சட்டையில் சிறுநீர் கழித்துவிட்டதாகக் கூறி வீட்டுக்கு வரும் தம்பியின் பாசம் பிஞ்சுகளின் வெள்ளை உள்ளத்தை படம் பிடிக்கிறது.
தேர்வுக்கு இன்னும் சில நொடிகள்... இதோ தொடங்கிவிட்டது. இன்னும் ஹயாத் வரவில்லை. ஹயாத்தின் தோழிகள் அவளின் வருகையை எதிர்நோக்குகிறார்கள். குழந்தையையும் பார்த்துக் கொள்ளவேண்டும். தேர்வும் எழுதவேண்டும். ஈரானிய பெண்குழந்தைகளின் கல்விக்கு அங்கு கொடுக்கப்படவேண்டிய அவசியம் படத்தில் உணர்த்தப்படுகிறது. முதிர்ந்த பெண்கள் கல்விக்கு அலட்சியம் காட்டுவதையும், வளரும் தலைமுறை அதை முக்கியமாகக் கருதுவதையும், பால் கணக்கு பாட்டி, ஊனமுற்ற தோழி என கதாபாத்திரங்கள் காட்டுகின்றன.
தேர்வு நேரங்களில் தாமதம் ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற நினைப்பே பதற்றம் தருவது. தேர்வு விடுமுறைக் காலங்களில் வரும் கனவுகளில் ‘தேர்வு தாமதம்’ பற்றி யவைதான்
அதிகமாக இருக்கும். இச்சூழலை எதிர்கொள்கிறாள் ஹயாத். தேர்வு அறைக்குப் பக்கத்தில் வாய்க்கால் அருகில் அமைந்த மரத்தில் தூளிகட்டி தொங்கவிட்டு அங்கிருந்து கயிறு இழுத்து தேர்வு அறைக்குள் தெரியாமல் நுழைத்து, சுற்றி வந்து பள்ளிக்குள் தாமதமாக நுழைந்து தேர்வெழுதத் தொடங்குகிறாள் ஹயாத்.குழந்தை அழாமல் இருக்க, தோழிகள் ஆசிரியருக்குத் தெரியாமல் கயிறைப் பிடித்து ஆட்டி தூங்க வைக்க முயல, அதையும் மீறி குழந்தை அழ, அனைவர் முகத்திலும் அதிர்ச்சி. ஹயாத்தின் ஆர்வத்தைப் பார்த்து ஆசிரியரே கயிற்றைப் பற்றிக் கொண்டு ஆட்ட, ஆனந்தம் தவழ்கிறது குழந்தை முகத்தில்.
கதை நிகழும் நேரம் ஒன்றரை மணிக்கும் அதிகம் இருக்காது. அதை சுவாரசியமாகக் கொடுத்திருப்பவர் இயக்குநர் ‘கோலம்-ரெஸா-ராமேஸானி’. தனது முந்தையை நாடகத்தைத் தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் ராமேஸானி. ஹயாத்தின் பரபரப்பை நம்மீது தொற்ற வைத்தவர் திரைக்கதை ஆசிரியர் ‘மொஜ்தாபா கோஷக் தாமன்’.சிறுமி ஹயாத் வேடத்தில் நடித்திருக்கும் ‘காஸலே பர்சாஃபர்’ மிகுந்த பாராட்டுக்குரியவர். படத் தொகுப்பாளர் ‘சையத் ஷாசவாரி’ன் பங்கு இப்படத்தில் முக்கியமானது.
படம் முடிந்து வெளிவந்ததும், இந்திய குழந்தைகள் திரைப்பட இயக்கத்தின் இயக்குநரிடம் கேட்கப்பட்டது. “இப்படத்தை இந்திய மொழியில் வெளியிடுவீர்களா?” என்று. ஆனால், பார்ஸி மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை இந்தப்படம் பார்க்க! மொழி புரியாமலே நாம் ‘ஹயாத்’துடன் ஒன்றி விடுகிறோம். இந்திய கிராமங்களின் சூழலுக்கும் ஈரானிய கிராமங்களின் சூழலுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. நம் நாட்டில் இத்தகைய படங்கள் வெளிவருமா? மொழிமாற்றப் படங்களால் தங்கள் வியாபாரம் பாதிப்ப தாகக் கூறும் சினிமா வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் இத்தகைய சினிமாக்களை மக்களுக்குத் தருவார்களா? தரும்வரை மொழி மாற்றத்திற்கான தேவை குறையாது.
- சமா.இளவரசன்
நன்றி: உண்மை
www.unmaionline.com

2 comments:

Cable சங்கர் said...

உங்களின் கட்டுரைகள் மிக நன்றாக உள்ளது. உங்களால் முடிந்தால் என்னுடய தளத்திற்க்கும் எழுதலாமே? தயவு செய்து என்னுடய இணையதளத்திற்க்கு வந்து உங்கள் கருத்தை தெரியப்படுத்தவும்
www.shortfilmindia.com
அன்பன்
சங்கர் நாராயண்

KARTHIK said...

அருமையான பதிவு.

வெகுசில இரான் படங்களே பாத்திருந்தாலும் அதன் தாக்கம் அதிகம்.
பார்த்துவிட்டு சொல்லுகிறேன்.