Monday, October 16, 2006

பேஷிங் (Bashing)

வழக்கமான வாழ்க்கையை மேற்கொண்டு, அதையே கர்ம சிரத்தையாக நினைத்து வாழும் சமூகத்திற்கு, மாற்றத்தை வரவேற்கவோ புதிய சிந்தனையை ஆதரிக்கவோ செய்வது எளிமையான ஒன்றல்ல. ‘நமக்கேன் வம்பு’ என்ற எண்ணத்தில் நிலைத்து விட்ட சமூகம், தன்னைச் சுற்றிய அவலங்களையும், கோளாறுகளையும் கண்டு கொள்ளவே செய்யாது. அவ்வாறு எவரேனும் நினைப்பதையும் விரும்பாது.

இப்படிப்பட்ட மனங்களில் ‘புரட்சி’யல்ல; எதிர்ப்புக் குரல்கூட எழும்பாது.அதுவும் இயந்திரங்கள் தயாரித்து தயாரித்தே மனித இயந்திரமாகிவிட்ட சமூகமான ஜப்பான் போன்ற நாடுகளில் இவற்றை எதிர்பார்க்க முடியாது.தன்னுள் ஒருவர் புதிய சிந்தனைகளோடு செயல்பட்டாலே, அவரிடமிருந்து அந்தச் சமூகம் விலகி நிற்கும்; அல்லது அவரை விலக்கி வைக்கும். தங்களுக்கான போராட்டமாகவே இருந்தாலும்கூட, வழக்கத்தை, அமைப்பை மாற்றும் பெருவெற்றியை நினைக்காமல், தொடக்கத்தில் ஏற்படும் சின்னத் தடங்கல்களைக் கண்டும் மாற்றத்தின் தடம் மிரண்டு போகும். பழைய நிலைமையே மேல் என்று தோன்றும்.
‘சூத்திரன் என்னும் இழிபெயரைச் சுமந்து கொண்டு இழிவான வாழ்க்கை வாழ்வதை விட, அந்த இழிவை ஒழிக்கும் போரில் சாவது மேல்’ என்று சொன்ன தந்தை பெரியாரைப் பின்பற்றும் சிந்தனையோ, ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ கூட எவ்வளவு பேருக்கு இருந்தது? இவன் யார் அதைச் சொல்ல என்று வசை மாரியும், எதிர்ப்பும் கிளம்பியது சூத்திரர்களிடமிருந்தும்!
சாலையில் கண்ணெதிரே நடக்கும் அநீதி-யைத் தட்டிக் கேட்கவோ, சுட்டிக் காட்டவோ ஒரே ஒரு குரல் கொடுத்தால் கூட போதும், மாறிவிடும் என்ற நிலை இருந்தாலும், நூறு பேர் சூழ நிற்கும் இடத்தில் இருந்து சின்ன அசைவு கூட இருக்காது. அவ்வாறு குரல் எழுப்பினால், அந்தக் குரல் வந்த திசையில் நிற்பதற்குக் கூட துணிவு இருப்பதில்லை. இது மத்திய தர வர்க்கத்தின் ‘தன்பெண்டு, தன் பிள்ளை’ என்னும் பாதுகாப்பு நிலைப்பாடு அதையும் மீறி வரும் குரலுக்கு எதிராகக் கூட மொத்த கூட்டமும் திரும்பும் அபாயமுண்டு.
‘இரணியன்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் நிகழ்வது அதுதான். இதே போன்ற ஒரு உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டு 2005-ல் ஜப்பானில் இயக்குநர் ‘மசாகிரோ கொபயாஷி’ இயக்கிய படம்தான் பேஷிங்.
யூக்கோ, தற்கால ஜப்பானிய இளம்பெண். மத்திய கிழக்கு நாடுகளில் செவிலியர் பணிக்காகச் செல்கிறாள். பணியின்போது ஈராக்-கில் பணயக் கைதியாகக் கடத்தப்படுகிறாள். பின்னர் அரசுகளின் முயற்சியால் மீண்டு, ஜப்பான் வந்து சேர்ந்து விடுகிறாள். இந்தப் பின்னணியில் நடக்கிறது கதை.
ஈராக்கில் அத்தியாவசியப் பணியாற்றி, அந்த மக்களுடன் ஒன்றிப் பழகிவிட்ட யூக்கோ, ஜப்பான் திரும்பியதும் தன்னைச் சுற்றியுள்ளோராலேயே வெறுக்கப்படுகிறாள். ஒட்டு மொத்த ஜப்பான் சமுதாயமும் அவளை எதிரிபோல் பாவிக்கிறது. சைக்கிளில் ஊர் சுற்றும் பழக்கமுடையவள் யூக்கோ. அவள் செல்லும் சாலைகளில் யாராலாவது அவமதிக்கப்படுவாள். அவளது சைக்கிளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, ஒருவன் தாக்குவான், வீட்டிற்குத் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் வரும். பணியிலிருந்து விலக்கப்படுவாள்.
யூக்கோ பொருள் வாங்கச் செல்லும் கடைக்காரன், இவருக்கு மட்டும் பொருள் தரமாட்டான். சண்டையிட்டு வாங்கிச் சென்-றாலும், சாலையில் ஒருவன் அதைப் பிடுங்கி எறிவான். நன்கு பழகிய தோழி இவளை கண்டும் காணாமல் செல்வாள். இத்தனைக்கும் மேல், யூக்கோவில் காதலனும் அவளைப் பிரிவான்.யூக்கோவுக்கு இருக்கும் ஆதரவு அவளது தந்தையும் குடும்பமும்தான். தாயின் பணியிடத்திலும், தந்தையின் பணியிடத்திலும் அதிகார மட்டத்திலிருந்து தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு, ஒரு கட்டத்தில் தந்தை பணியிலிருந்து விரட்டப்படுகிறார். கட்டுக்கடங்காத மிரட்டல்களும், தொல்லைகளும் விரக்தியின் எல்லைக்கே யூக்கோவின் குடும்-பத்தைக் கொண்டு செல்கிறது.
இத்தனைக்கும் காரணம் வேறொன்றுமில்லை. ஜப்பானிய அரசினால் தடுக்கப்பட்டும் கூட மீறி, ஈராக் சென்று அங்கு மனித நேயப் பணியாற்றியதன் விளைவு. அங்கிருந்து கடத்தப்பட்டு, பணயக் கைதியானவுடன் யூக்கோவுக்குக் கிடைத்த உலக அறிமுகம் அவள் மீட்கப்பட்டு வந்தவுடன் அதற்கான எதிர்வினை மக்களிடமிருந்து கிளம்புகிறது. சாதாரண வாழ்க்கை வாழாமல் ‘உனக்கேன் இந்த வேலை’ என்னும் சிந்தனை, வெறுப்பின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. “ஜப்பான் அரசு தடை சொல்லியும் அதை மீறி ஈராக் செல்ல வேண்டிய அவசியமென்ன? ஈராக்குக்கு அவள் சென்றிடாவிடில், கடத்தப்பட நேர்ந்திருக்காது அல்லவா? அவளுக்கேன் இந்த வேலை?” இவைதான் அவர்களின் வெறுப்பிற்கான பிரதான காரணங்கள். மீண்டும் மீண்டும் வரும் இந்தக் கேள்விகளும், எதிர்ப்புகளும், யூக்கோவின் ஒரே ஆதரவான தந்தை-யையும் குடிகாரனாக்கி, அவளிடமிருந்து பிரித்து விடுகிறது.கோபமும், குரோதமும் நிறைந்த முகங்களால் சூழப்பட்ட இந்த வாழ்க்கை, யூக்கோவை ஒரு நிம்மதியான இடத்தை, தன்னை நேசிக்கும் மனிதர்களுடனான வாழ்வைத் தேட வைக்கிறது. மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளின் குழந்தைகளை நோக்கிச் செல்ல முடிவெடுக்கிறாள். தன் வாழ்வை நிறைவு செய்யும் இடத்தைத் தேடி, இனிப்புப் பண்டங்களோடு செல்கிறாள்.
இன்றும்கூட, காரணம் இல்லாமல் வெறுப்பை வளர்க்கும் விதைகள் காற்றில் கலக்கப்படுகின்றன. பார்த்தீனியத்தை விட நச்சு நிரம்பிய இந்த விதைகள் யாரையும் உடனேயே வெறுக்க வைத்து விடுகிறது. அன்பின் சுவடுகளை சின்னாபின்னப்படுத்தி ஆக்ரோஷ-மாக வளர்கிறது வெறுப்பு.இதன் உண்மை நிகழ்வைப் பற்றிய இணையப் பதிவு ஒன்றில், ‘கடத்தப்பட்ட பெண் திரும்பி வரவேண்டும் என்று ஜப்பானிய மக்கள் விரும்பியதையும், ஜப்பானிய அரசு அதற்கான முழு முயற்சியெடுத்து மீட்டு வந்ததையும் பற்றிக் கிடைக்கிறது. அதன் பிந்தைய ஊடகங்களின் செய்திகளாலும் விவாதங்களாலும் ‘இவளுக்கேன் இந்த வேலை’ என்ற சிந்தனை, வெறுப்பாக விதைக்கப்பட்டதையும் பற்றிக் குறிப்பிடுகிறார் அந்தப் பதிவர்.
இன ரீதியான ஒடுக்குதல் இல்லை; இது, குண ரீதியான ஒடுக்குதல். இதனைத் தன் கதையில் வெகு நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ‘மசாகிரோ கொபயாஷி’ ‘யூக்கோ’வாக நடித்திருக்கும் ‘உரேபே புசாகோ’, கொந்தளிக்கும் தன் பாத்திரத்தை உணர்ந்து வெளிப்-படுத்தியிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் ‘பிரான்ஸிஸ் ட்ருஃபாட்’டிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ‘மசாகிரோ’ என்பது குறிப்பிடத்தக்கது.

- சமா.இளவரசன்
நன்றி: உண்மை