Sunday, October 08, 2006

பல அவதாரமெடுத்த பன்னாட்டுக் கடவுள்

கடந்த மாதம் வரை தமிழ்ப்படம் பார்க்க திரையரங்கம் சென்றவர்களெல்லாம், சட்டையில் இரத்தக்கறை இல்லாமல் திரும்பி வந்திருக்க முடியாது. அவ்வளவு, வன்முறை...
திரையைக் கிழித்துக் கொண்டு வந்து நம் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு வன்முறை.வன்முறையாளர்கள், கூலிப்படையினர்தான் கதாநாயகப் பாத்திரங்கள். அவர்கள் நாயகர்களாகக் கூடாது என்பதல்ல.. வன்முறையாளர்களின் வாழ்க்-கைமீது அப்படியென்ன தமிழ் சினிமாக்காரர்களுக்கு திடீர் பாசம் என்று மக்களுக்குப் புரியவில்லை.“ஒன்றா, இரண்டா... எண்ணிக்கை தெரியாத குற்றம்” என்று கட்டபொம்மன் வசனம் பேசி-விடலாம். சந்து பொந்துகளில் இருந்தவர்களெல்லாம் கையில் அரிவாளையும், துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு தேடி வந்துவிட்டார்கள்.
சினிமா சுவரொட்டிகளெல்லாம் ரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட நிறம், தொடர்ந்து இந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு. நம்மைச் சுற்றியும் நாலு பேர் துப்பாக்கியுடன் திரிவது போன்றே பிரமை ஏற்பட்டிருந்தது. தமிழகம் ரத்தச் சகதியில் மிதப்பதாகத்தான் தோன்றும் ‘என்ன இப்படியெல்லாம்’ என்று யோசிப்பவர்கள் கொஞ்சம் தமிழ் சினிமாக்காரர்களை ஊர்ந்து கூர்ந்து நோக்குபவர்களாயிருந்தால், தெரிந்திருக்கும் ஏதோ ஒரு வெளிநாட்டுப் படம் இத்தளத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்று. அப்படி இருந்தால் தான் எல்லோரின் மூளையிலும் ஒரே நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும்.
இவை Godfather படத்தின் தாக்கமோ என்று சந்தேகம் இருந்தது. (அதை ஏற்கனவே ‘சுயம்பு’ மணிரத்னம் ‘நாயகன்’ ஆக்கிவிட்டார். இந்தியில் ‘sarkar’ என்று வெளிவந்துவிட்டது).ஆனால் ஹாலிவுட் படங்களெல்லாம் தமிழ்ப் பேசிக் கொண்டு திரையில் வரத் தொடங்கியிருப்-பதால், அவற்றிலிருந்து... தாக்கம் (inspiration) பெற்றுப் படம் எடுப்பது தமிழ் திரையுலகிற்கு சிரமம். ஆகையால் உலக சினிமாக்களை நோக்கி இவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.
Mission Impossible (ஹாலிவுட் படம்) பார்த்து ‘என் சுவாசக் காற்றே’யில் சில காட்சிகள் எடுத்தாலும் கண்டுபிடிக்க முடிந்து விடுகிற தமிழ் சினிமா ரசிகர்களால், ‘Ameros Perros-ன் (ஹாலிவுட் அல்லாத உலக சினிமா) திரைக்கதை வடிவத்தை மணிரத்னம் எடுத்துக் கொண்டு ‘ஆய்த எழுத்து’ படமெடுத்தால் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் வெற்றி!
சென்னை, பாரிமுனை டிவிடி கடைகளின் நிரந்தர வாடிக்கையாளர்கள் யாரென்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர்களின் பெயர் வரும். எந்தப் படம் எந்தப் படத்தின் தழுவல் என்ற ‘பட்டியல்’ அவர்களிடம் இருக்கும். மணிரத்னத்திற்குப் பிறகு, அவரைப் போலவே சினிமாவில் யாரிடமும் பணியாற்றாமல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘சுயம்பு’ செல்வராகவன் வரை எந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொந்தமாகச் ‘சிந்தித்து’ எடுத்தார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
தெலுங்கிலிருந்து படத்தின் உரிமையை, உரிய பணம் கொடுத்து வாங்கி, படம் எடுக்கும் ஜெயம் கம்பெனியின் படங்களைவிட, நூறு ரூபாய்க்கு டிவிடி வாங்கி அப்படியே கதையை உருவி விடும் இந்தப் படைப்பாளிகள் எவ்விதத்தில் உயர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
சரி, இந்தத் தொடர் வன்முறைப் படங்களுக்கு மூலம் எது? பிரேசிலில் ரியோடி ஜெனராவில் எடுக்கப்பட்ட "City of God" “இந்தக் கடவுள் தான் பல அவதாரம் எடுத்து தமிழகத்தில் இத்தனைப் படங்களாக வெளி வந்திருக்கிறார்” என்றார் அவதாரம் ஒன்றின் தயாரிப்பாளர். நாளை, பட்டியல், தலைநகரம், டான் சேரா, தூத்துக்குடி, புதுப்பேட்டை, கொக்கி... இன்னும் எண்ணிலடங்கா படங்கள் வருவதற்கு இப்படமே அடிப்படை.‘சிட்டி ஆஃப் காட்’ நகரில் வாழும் நிழல் உலக மாந்தர்கள், போதை மருந்து விற்பனையாளர்கள், அவர்களின் பல்வேறு குழுக்களிடையே நிகழும் போட்டிகள், வன்முறைகள் என்று களேபரமாக நகர்கிறது படம்.
சிறுவர்கள் எப்படி குழுக்களுக்குள் இணைகிறார்கள், அடுத்தடுத்த பரம்பரை எப்படி உருவாகிறது என்பதை அந்த நாட்டின் சூழலுக்குள் பொருந்தி எடுக்கப்பட்ட படம். இதைத்தான் தமிழ்நாட்டு சூழலுக்குள் பொருத்தி எடுத்திருக்கிறார்கள், இத்தனைப் படங்களிலும்.
இவற்றிலெல்லாம் அப்படத்தின் அதிகபட்ச சாயல் அப்படியே தொனிப்பது செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’யில் தான். இதுவரை அவர் எடுத்த படங்களின் காட்சிகளும் நறுக்குகளும் கூட தாய்லாந்து படங்களின் சாயலில் இருப்பது இப்போது தெரிய வருகிறது. சம்சாரா, ஜான்டாரா போன்ற படங்களின் சிற்சில பதிவுகள் இவர் படங்களில் காணப்படுகிறது (இதற்குத்தான் அடிக்கடி பேங்காக் போய் வருகிறாரோ என்னவோ?)
தழுவல் இலக்கியங்கள், மொழி பெயர்ப்புகளை எல்லாம் விரும்பி வரவேற்கும் சமூகம், ஏன் தழுவல் படங்களைப் பார்த்து நகைக்கிறது என்று யோசித்தால், திருடி வளர்த்த பிள்ளையை என் பிள்ளை என்று உரிமை கொண்டாடினால் சமூகம் நகைக்கத்தானே செய்யும்?

- இளையமகன்
நன்றி: உண்மை

No comments: